நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் சேனைக் கிழங்கு பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1. Grow Bags அல்லது Thotti
- 2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- 3. விதைக்கிழங்குகள்
- 4. பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கிழங்கு எளிதாக வளரவும், மண் இறுகிப்போகும் பிரச்சனை இல்லாமல் இருக்கவும் தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக சேர்க்க வேண்டும். சேனைக்கிழங்கு வளர்வதற்கு இடும் உரக்கலவையானது பொல பொல தன்மையுடன் இருக்க வேண்டும்.
விதைத்தல்
கிழங்குகளை சிறு சிறு துண்டுகளாக்கி, தயார் செய்துள்ள உரக்கலவையில் புதைத்து வைக்க வேண்டும். முளைவுடன் கூடிய கிழங்குகளையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு செடிக்கும் அரை அடி இடைவெளி இருக்குமாறு நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறுவதற்கு பைகளின் அடியில் இரு துளைகள் இட வேண்டும்.
உரங்கள்
சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மீன், மாமிசம் கழுவிய தண்ணீரை ஒரு நாள் வைத்திருந்து செடிகளுக்கு ஊற்ற வேண்டும். இது சிறந்த வளர்ச்சி ஊக்கியாக செயல்படும்.
தண்ணீருடன் பஞ்சகாவ்யா கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
சமையலறையில் வீணாகும் அனைத்தையும் மட்கச்செய்து உரமாக பயன்படுத்தலாம். இயற்கை இடுபொருட்களை பயன்படுத்துவதால் நோய் தாக்குதல் இருக்காது.
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். வேறு எந்த ஒரு பாதுகாப்பு முறையும் இதற்கு தேவைப்படாது.
அறுவடை
கிழங்கு முற்றிய செடியில் இலைகள் மஞ்சளாக மாறி கீழே தொங்கிவிடும். அப்பொழுது அறுவடை செய்ய வேண்டும்.
சேனைக் கிழங்கு பயன்கள்:
- இதில் மாவு மற்றும் புரதச் சத்துக்கள் உள்ளன. அத்துடன் வைட்டமின்களும் உள்ளன.
- 100 கிராம் கிழங்கில் 330 கலோரி சக்தி கிடைக்கிறது. மேலும், சேனையில் கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் போன்ற தாதுக்கள் அதிகம் உள்ளன.
- கீல்வாதம், நீரிழிவு, தொழுநோய், மூலநோய், உடம்பு வறட்சி, உடல் பலவீனம், ஆஸ்துமா முதலியவற்றை இக்கிழங்கு குணமாக்குகிறது. இது உடலை வலுவடையச் செய்யும்.
- இக்கிழங்கினை உட்கொண்டால் உணவு செரிமானம் ஆகி நன்கு பசி எடுக்கும்.
- இதில் உள்ள கால்சியச்சத்து வயதானவர்களின் எலும்பு பலவீனமடைந்து விடாதபடி பாதுகாக்கிறது. பித்தக் கோளாறுகள், வயிற்றுக் கோளாறுகள் முதலியவற்றையும் இது குணமாக்குகிறது.
Leave a Reply to all | Agriculture Trip Cancel reply