நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் துளசி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
- தண்டுகள் அல்லது விதைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
துளசி செடி வளர்ப்பதற்கு சிறிய அளவிலான பை அல்லது தொட்டி போதுமானது.
தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு இயற்கை உரம், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். பைகளில் உரங்களை நிரப்பும் போது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
விதைகளாக இருந்தால் குழித் தட்டுகளில் தென்னை நார்க்கழிவை நிரப்பி, அதில் விதைகளை ஊன்ற வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். 20 நாட்களில் நாற்றுகளை தொட்டி அல்லது பைகளுக்கு மாற்ற வேண்டும்.
தண்டுகளாக இருந்தால் தொட்டியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும். அதன் வேர் பகுதிகள் முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
தண்டுகளை ஊன்றியவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும்.
உரங்கள்
சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.
மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பாதுகாப்பு முறைகள்
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாகவும், உரமாகவும் செயல்படும்.
இதன் காய்ந்த பகுதிகளை அவ்வப்பொழுது நீக்கிவிட வேண்டும். அப்பொழுது தான் துளசி செடியானது குத்து செடியாக வளரும்.
அறுவடை
இலைகளை செடியில் இருந்து கிள்ளி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மறுபடியும் வளர ஏதுவாக இருக்கும். இது பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால் வீட்டிற்கு ஒரு செடி வளர்ப்பது நல்லது.
துளசி பயன்கள்
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன.
- துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறைந்துவிடும்.
- துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் ஏதேனும் தொற்று இருந்தாலும் குணமாகும்.
- வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
- துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி உடலை நெருங்காது.
- துளசி இலைகளைத் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.
Leave a Reply