நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் பொன்னாங்கண்ணி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1. Grow Bags அல்லது Thotti
- 2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
- 3. குச்சி (போத்துகள்)
- 4. பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக மண், இயற்கை உரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை சம அளவு கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
பைகளில் உரங்களை நிரப்பும் போது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
குச்சிகளை தொட்டியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும். அதன் வேர் பகுதிகள் முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
குச்சிகளை விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
உரங்கள்
சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
ஒரு கையளவு சாணத்தை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒருமுறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாகவும், உரமாகவும் செயல்படும்.
அறுவடை
கீரைகளை இதன் வேர்ப்பகுதியில் இருந்து கிள்ளி எடுக்க வேண்டும். அப்பொழுது தான் மறுபடியும் தழைத்து வர ஏதுவாக இருக்கும்.
பயன்கள்:
- புரதம், இரும்பு, சுண்ணாம்பு சத்துக்கள் மற்றும் வைட்டமின் C நிறைந்த இந்தக் கீரை உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடியது.
- இந்த கீரை கண் எரிச்சல், கண் மங்கல், கண் கட்டி, கண்ணில் நீர்வடிதல், போன்ற கண் நோய்களை குணமாக்கும் தன்மைகொண்டது. பொன்னாங்கண்ணி கீரையை தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட்டு வர, கண் பார்வை நன்றாக தெரியும்.
- பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
- இந்த கீரையில் கல்சியம் அதிக அளவில் இருப்பதால் எலும்புகளின் உறுதிக்கும், பற்களின் ஆரோக்கியத்துக்கும் உதவுகிறது.
- பொன்னாங்கண்ணி கீரையுடன் பூண்டு, வெங்காயம் சேர்த்து வதக்கி அதனுடன் சீரகம் சிறிது சேர்த்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் படிப்படியாக குணமாகும்.
- கூந்தல் நன்றாக வளர பொன்னாங்கண்ணிச் சாற்றை தேங்காய் எண்ணையுடன் சேர்த்துக் காய்ச்சி தைலமாக பயன்படுத்தலாம்.
Leave a Reply