🌿 துளசி (Tulsi)
துளசி அறிமுகம்
துளசி என்பது ஒரு முக்கியமான மருத்துவ மூலிகைச் செடியாகும். மூலிகைகளின் அரசி என்று அழைக்கப்படும் துளசியின் தாயகம் இந்தியா. அதன் பின் அந்தமான் மற்றும் நிகோபர் தீவுகளுக்கு பரவியது. இந்தியா, இலங்கை போன்ற நாடுகளில் தன்னிச்சையாக வளர்ந்து காணப்படுகிறது.
சுமார் 50 சென்டிமீட்டர் உயரம் வரை வளரக்கூடிய சிறு புதராகும். துளசியின் அனைத்து பாகங்களும் — இலை, தண்டு, பூ — அனைத்தும் மருத்துவ குணமுடையவை.
இது கோயில் பூஜைகளில் பயன்படுத்தப்படுவதால் கோயில் பூந்தோட்டங்களில் வழக்கமாகக் காணப்படுகிறது. வீடுகளில் துளசியை வளர்த்து பூஜிக்கும் வழக்கமும் நம் நாட்டில் உண்டு.
ஆன்மீக முக்கியத்துவம்
துளசி பெருமாள் கோயில்களில் பூஜைக்கு பயன்படுத்தப்படும் முக்கிய மூலிகையாகும். இதனால் பெரும்பாலான கோயில் தோட்டங்களிலும் இது காணப்படும். வீடுகளில் துளசியை வளர்த்து வழிபடும் பழக்கம் இந்தியர்களிடையே பொதுவானது. இது “தெய்வீக மூலிகை” எனப் போற்றப்படுகிறது.
வேறு பெயர்கள்
துளசி பல பெயர்களில் அறியப்படுகிறது — துழாய், துளவம், மாலலங்கல், ஸ்ரீதுளசி, ராமதுளசி போன்றவை.
வகைகள்
துளசியில் பல வகைகள் உள்ளன:
- நல்துளசி
- கருந்துளசி
- செந்துளசி
- கல்துளசி
- முள்துளசி
- நாய்துளசி (திருத்துழாய் அல்லது கஞ்சாங்கோரை)
- காட்டுத் துளசி
இவை நிறம், மணம் மற்றும் தாவர வடிவம் ஆகியவற்றில் சிறிய வேறுபாடுகள் கொண்டவை.
வளர்ச்சி தன்மை
துளசி மணமிக்க இலைகளும், கதிர் போல மலர்களும் உடைய சிறிய புதர்ச்செடி. வடிகால் வசதியுள்ள மண்வகைகள் — செம்மண், வண்டல்மண், களிமண் கலந்த மணற்பாங்கான இருமண் — இதற்கு ஏற்றது. மண் pH அளவு 6.5 முதல் 7.5 வரை இருக்க வேண்டும். வெப்பநிலை 25°C முதல் 35°C வரை துளசியின் சிறந்த வளர்ச்சிக்காகப் பொருத்தமானது.
துளசியை விதைகள் மூலமாகவோ அல்லது இளம் தண்டுகள் மூலம் பெருக்கலாம்.

எப்படி பயிரிடுவது…?
- துளசியை இரண்டு முக்கிய இனங்களாகப் பிரிக்கலாம்:
- பேசிலிக்கம் இனம்: இச்செடிகள் மிகச்சிறியவைகளாகவும், மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மையுடைய இலைகளுடனும் காணப்படும்.
- சேங்க்டம் இனம்: 2 முதல் 3 ஆண்டுகள் வரை வாழ்பவைகளாகவோ அல்லது பல்லாண்டுவாழ் குத்துச் செடிகளாகவோ வளருபவை. இலைகளில் மியூசிலேஜ் போன்ற வழவழப்புத் தன்மை இல்லாமல் சிறிய மலர்கள் உடனும் காணப்படும்.
- நடவு செய்ய மார்ச் முதல் செப்டம்பர் வரையிலான மாதங்கள் உகந்தவை.
- துளசி எல்லாவிதமான மண் வகைகளிலும் வளரும் என்றாலும் வடிகால் வசதியுள்ள செம்மண் மற்றும் செம்பொறை மண் மிகவும் ஏற்றது. அதிக உப்பு, காரத்தன்மை மற்றும் நீர் தேங்கும் பகுதிகளில் வளருவதில்லை.
- ஒரு ஏக்கருக்கு நாற்றங்காலில் நாற்றுகள் உற்பத்தி செய்ய 150 முதல் 200 கிராம் விதைகள் தேவைப்படும்.
- நிலத்தை நன்கு உழுது தேவையான அளவிற்கு மேட்டுப்பாத்திகள் அமைக்க வேண்டும். விதைகளை மணலுடன் கலந்து மார்ச் மாதத்தில் விதைக்க வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். 10 நாட்களில் முளைக்கும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 5 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலக்க வேண்டும்.
- நாற்றுகள் 6 வாரங்களில் 4–5 இலைகளுடன் காணப்படும். அப்பொழுது நடவிற்கு பயன்படுத்த வேண்டும்.
- விதைகளை நேரடியாக விதைத்தும் சாகுபடி செய்யலாம். அதாவது விதைகளை மணலுடன் கலந்து 50–60 செ.மீ இடைவெளியில் வரிசையில் சிறிது சிறிதாக விதைத்து மேல்மண் கொண்டு மூட வேண்டும்.
- தண்டுகள் மூலம் சாகுபடி செய்ய துளசியின் நுனிகளை வெட்டி அக்டோபர்–டிசம்பர் மாதங்களில் நடவு செய்தால் 90–100% முளைக்கும். இதற்கு 8–10 கணுக்கள் மற்றும் 10–15 செ.மீ நீளமுடைய துண்டுகள் தேவைப்படும்.
- முதல் இரண்டு, மூன்று ஜோடி இலைகளைத் தவிர மற்றவற்றை அகற்ற வேண்டும். பின்னர் அவற்றை நன்கு தயாரிக்கப்பட்ட நாற்றங்கால் படுக்கைகள் அல்லது பாலித்தீன் பைகளில் நடவு செய்ய வேண்டும். 4–6 வாரங்களில் வேர்கள் பிடித்துவிடும். அவற்றை வரிசைகளுக்கு இடையே 40 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- நடவு செய்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். தாவரங்கள் நன்கு வளர ஒரு மாதத்திற்கு வாரம் இருமுறை பாசனம் செய்ய வேண்டும். பின்னர் 7–10 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் போதுமானது.
- ஏக்கருக்கு 20–25 கிலோ தழைச்சத்து, 10–15 கிலோ மணிச்சத்து உரங்களை நடவிற்கு பின் ஒரு மாதம் கழித்து மேலுரமாக கொடுக்க வேண்டும். இதே அளவு உரங்களை ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் 10–15 நாட்கள் கழித்து கொடுக்க வேண்டும்.
- ஏக்கருக்கு சாம்பல்சத்து 75 கிலோ அளவில் அடியுரமாக இடவேண்டும். தாமிரம் போன்ற நுண்ணூட்டச்சத்துக்களை 50 பி.பி.எம் அளவில் இலைவழியாக தெளிப்பதால் எண்ணெய் மகசூல் அதிகரிக்கிறது.
- முதல் களையெடுத்தல் நடவு செய்த ஒரு மாதம் கழித்து எடுக்க வேண்டும். அடுத்த 30 நாட்களில் இரண்டாவது முறையாக களையெடுக்க வேண்டும். பிறகு செடி வளர்ந்து புதர் போல் மண்ணை மூடி விடும். ஒவ்வொரு அறுவடைக்குப் பின்னரும் களையெடுத்தல் அவசியமாகும்.
- முதல் அறுவடையை நடவு செய்த 90 நாட்களுக்குப் பிறகு செய்யலாம். பிறகு ஒவ்வொரு 75 நாட்களுக்குப் பிறகும் அறுவடை செய்ய வேண்டும். பயிர் நன்கு வளர்ந்த பிறகு 15 செ.மீ அளவிற்கு வெட்டி அறுவடை செய்ய வேண்டும். அப்போதுதான் பயிர் அடுத்த அறுவடைக்கு தயாராகும்.
- ஒரு எக்டரில் 25–30 டன் தழை மகசூலும், 200 கிலோ எண்ணெய் மகசூலும் கிடைக்கும்.
பயன்கள்
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் துளசி இலையை சாப்பிட்டு வந்தால், அவை இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதய நோய் வரும் அபாயத்தைக் குறைக்கின்றன.
- துளசி இலைகளை எலுமிச்சைச்சாறு விட்டு நன்கு மை போல் அரைத்து அந்த விழுதைத் தோலில் தடவி வந்தால் நாள்பட்ட சொறி, படை, சிரங்குகள் மறைந்துவிடும்.
- துளசி இலையை சாறு எடுத்து, அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து குடித்து வந்தால், சிறுநீரக கற்கள் மற்றும் சிறுநீரக பாதையில் தொற்று இருந்தாலும் குணமாகும்.
- வெட்டுக் காயங்களுக்குத் துளசி இலைச் சாற்றை பூசி வந்தால் அவை விரைவில் குணமடையும்.
- துளசி இலையைப் போட்டு ஊற வைத்த நீரை தொடர்ந்து பருகி வந்தால் நீரழிவு வியாதி உடலை நெருங்காது.
- துளசி இலைகளைத் தினமும் உண்டு வந்தால் குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்சினைகள் வாழ்நாள் முழுவதும் வராது.
காட்டுத் துளசி
இது துளசியின் ஒரு இனமாகும். இதன் மணம் குறைவானது, ஆனால் மருந்து குணம் அதிகம். இதனை “பேய்த்துளசி” என்றும் அழைக்கின்றனர். இது உணவாக அரிதாகவே பயன்படுத்தப்படுகிறது.
செந்துளசி
செந்துளசி துளசியைப் போன்றே தோற்றமளிக்கும், ஆனால் தண்டு மற்றும் இலைகள் சிவப்பு நிறத்தில் காணப்படும். இவை நீள்வட்டமான இலைகளைக் கொண்டவை. செந்துளசியின் அனைத்து பாகங்களும் மருத்துவ குணமுடையவை.

Leave a Reply