கீழாநெல்லி ஒரு மருத்துவ குணமுடைய செடியாகும். செடி முழுவதும் மருத்துவப் பயன்பாடு உடையதாகும்.
இது வெப்பமண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடியினத்தை சேர்ந்தது. இந்தியாவின் எல்லா பகுதிகளிலும் காணப்படுகிறது. சுமார் ஒரு அடி உயரம் வரை வளரும் ஓராண்டுத் தாவரமாகும்.
இதன் இலையின் அடிக்காம்பில் வரிசையாக காய்கள் காய்ப்பதால் கீழ்காய்நெல்லி என தமிழர் பெயரிட்டு அழைத்தனர். பேச்சு வழக்கில் கீழ்வாய் நெல்லி, கீழாநெல்லி, கீட்காநெல்லி எனவும் அழைக்கின்றனர்.
ஆதி காலத்தில் தமிழர் மருத்துவத்தில், மஞ்சள்காமாலை நோய்க்கு இம்மூலிகையை பயன்படுத்தி வந்துள்ளனர்.
இந்தியாவில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வுகூடங்களில் இம்மூலிகை பல்வேறு விதங்களில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
எப்படி பயிரிடுவது…?
- நவ்யாகிரிட் என்ற இரகமானது சாகுபடி செய்யப்படுகிறது. இது உயர் புல் வகையை சார்ந்தது.
- ஜீன் – ஜீலை மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
- 7.5-6.5 கார அமிலத் தன்மை கொண்ட, வடிகால் வசதியுள்ள மணல் கலந்த மண் மற்றும் களிமண் ஏற்றது. வெப்பமண்டல பகுதியில் மானாவாரி பயிராக நன்கு வளரும் தன்மை கொண்டது.
- ஒரு ஏக்கருக்கு நாற்றுகளை தயாரிக்க 1 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
- விதைகளின் முளைப்புத் திறனை அதிகரிக்க விதைப்பதற்கு முன் நல்ல தண்ணீரில் விதைகளை 20-30 நிமிடங்கள் ஊற வேண்டும். மேலும் ஜிஏ3 200 பிபிஎம் கொண்டு 6 மணிநேரம் விதை நேர்த்தி செய்ய வேண்டும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது மேல் மண்ணை சமன்படுத்த வேண்டும். பின் தேவையான அளவில் பாத்திகள் அமைக்க வேண்டும். விதை நேர்த்தி செய்த விதைகளை பாத்திகளில் விதைக்க வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளிக்க வேண்டும். விதைகள் ஒரு வாரத்தில் முளைத்து விடும். அவற்றை 20 நாட்கள் வரை நாற்றங்காலில் வைத்து பராமரிக்க வேண்டும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது ஏக்கருக்கு 10 டன் தொழு உரம் இட்டு, சமன் செய்து கொள்ள வேண்டும். பின் அதில் தேவையான அளவில் பாத்திகளை அமைக்கவேண்டும்.
- தயார் செய்துள்ள நடவு வயலில் மூன்று முதல் நான்கு வாரம் வயதுடைய நாற்றுகளை 10 x 15 செ.மீ இடைவெளியில் நடவு செய்ய வேண்டும்.
- நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மண்ணின் ஈரப்பதத்திற்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.
- ஒரு ஏக்கருக்கு 50 கிலோ தழைச்சத்து, 25 கிலோ மணிச்சத்து மற்றும் 25 கிலோ சாம்பல் சத்து தரக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். தழைச்சத்து மற்றும் சாம்பல்ச்சத்து முழு அளவும், மணிச்சத்து பாதி அளவும் அடியுரமாக அளிக்க வேண்டும். மீதமுள்ள மணிச்சத்தை இரு பகுதிகளாக பிரித்து பாதி அளவு நடவு செய்த 30வது நாளிலும், மீதமுள்ள அளவை நடவு செய்த 60வது நாளிலும் அளிக்க வேண்டும்.
- செடிகள் நட்ட 20 முதல் 25 நாட்களில் முதல் களை எடுக்க வேண்டும். பின்னர் குறிப்பிட்ட இடைவெளியில் களை எடுக்க வேண்டும்.
- இந்த மூலிகை செடி பொதுவாக அதிக நோய் எதிர்ப்பு சக்தி கொண்டதால் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை முயற்சிகள் அதிகம் தேவைப்படாது.
- செப்டம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் சாகுபடிக்கு தயாராகி விடும். நடவிலிருந்து 80 முதல் 100 நாட்களில் தாவரங்களை அறுவடை செய்யலாம்.
- ஒரு ஏக்கருக்கு சராசரியாக மூலிகை 17.5 டன் மற்றும் உலர் மூலிகை 1750 கிகி வரை மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
- நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி விடும்.
- கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளித்தால் அரிப்பு சம்பந்தமான நோய்கள் வராது.
- குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவில் மாத்திரைகளாகச் செய்து காலை மாலை சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
- கீழா நெல்லியுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாட்கள் சாப்பிட கல்லீரல் தொடர்பான நோய்கள், சோகை, இரத்தமின்மை ஆகியவை குணமாகும்.
- கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் குணமாகும்.
Leave a Reply