அரைக்கீரை யானது தண்டுக் கீரை இனத்தைச் சார்ந்த கீரை வகைகளில் ஒன்றாகும். இக்கீரை குத்துச் செடியாகப் படரும் தன்மையுடையது.
அறுத்து விட்டால் மறுபடியும் துளித்து வளரும் தன்மையுடையது.
செடியிலிருந்து கீரையைப் பலமுறை அறுவடை செய்து பயன்படுத்துவதால் அறுப்புக்கீரை என்னும் பெயரும் இக்கீரைக்கு உள்ளது
இக்கீரை, கிளைவிட்டு வளரக் கூடியது. செங்குத்தாக நிற்கும் தன்மை பெற்றது.
சுமார் ஒரு வருடம் வரை பலன்தரும். இக்கீரையின் மேல்நிறம், பச்சை நிறமாகத் தோற்றமளிக்கும்.
எப்படி பயிரிடுவது…?
பருவம்
இதனை ஆண்டு முழுவதும் பயிர் செய்யலாம். சித்திரை, ஆடி, மார்கழி, மாசிப்பட்டம் ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல மண்ணும், மணலும் கலந்த சற்றே அமிலத்தன்மை கொண்ட இருமண் பாட்டு நிலம், செம்மண் நிலம் கீரை சாகுபடிக்கு உகந்தது.
விதையளவு
ஒரு எக்டருக்கு 2.5 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தில் ஏக்கருக்கு 5 டன் தொழு உரம், 4 டன் எருவைக் கலந்து பரவலாகக் கொட்டி உழவு செய்து மண்ணை பண்படுத்த வேண்டும். பிறகு தேவையான அளவு பாத்திகள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்
கீரை விதைகளோடு மணல் கலந்து பாத்திகளில் தூவி விட வேண்டும். பின் கையால் கிளறி பாசனம் செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைகள் விதைத்தவுடன் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைகள் ஒரு பக்கமாக அடித்துச் செல்லாமல் இருக்க பூவாளியால் நீர்ப்பாய்ச்ச வேண்டும். விதைத்த மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின் நான்கு நாட்களுக்கு ஒருமுறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
ஜீவாமிர்தக் கரைசலை மாதம் இரண்டு முறை பாசன நீரில் கலந்து விடவேண்டும். இதனால் கீரைகளின் வளர்ச்சி சீராக இருக்கும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
ஒரு வார காலத்தில் விதைகள் முளைக்க ஆரம்பிக்கும். 10 -15 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பயிரின் எண்ணிக்கையை பொறுத்து பயிர் களைதல் வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
பூச்சி தாக்குதல்
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
இக்கீரையானது 30 செ. மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது. இதனை 5 செ.மீ உயரம் விட்டு அறுவடை செய்ய வேண்டும். குறிப்பிட்ட இடைவெளியில் கீரைகளை அறுவடை செய்ய வேண்டும்.
அரைக்கீரை
பயன்கள்
- உயிர்ச் சத்தான வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவு இக்கீரையில் உள்ளன.
- தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
- உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும் தன்மை கொண்டது.
- இந்தக் கீரையுடன் பெருங்காயமும், வெங்காயமும் சேர்த்துக் செய்த பொரியலானது ஜலதோஷம், ஜன்னி, குளிர்க்காய்ச்சல் ஆகியவைகளை நீக்கும்.
- இக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.
- அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவிவர தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும்.
manikandan K says
விதைகள் எங்கே கிடைக்கும்