ஆமணக்கு செடி எப்பொழுதும் பசுமையோடு இருக்கும், ஒரு வகையான புதர்ச் செடியாகும்.
பத்து மீட்டர் உயரம் வரையில் வளரும் இந்தச் செடி பல பருவ தாவரமாகும்.
இதன் தண்டுப் பகுதியில் வெண்மையான மாவு படிந்து காணப்படும்.
ஆமணக்குச் செடிகள் பொதுவாக கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் காணப்படுகிறது.
இந்தியாவில் அனைத்து இடங்களிலும், தரிசு நிலங்களிலும் இவை நன்றாக வளர்கின்றன.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
டெஎம்வி-4 (105 நாள்கள்), டெஎம்வி-5 (120 நாள்கள்), டிஎம்வி-6 (160 நாள்கள்), எ.எம்.வி.எச்-1 (160 நாள்கள்), ஒய்.ஆர்.சி.எச்.1 (150 நாள்கள்) ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
ஆமணக்கு மானாவாரியாக பயிரிட ஜூன் – ஜூலை (ஆடிப் பட்டம்) மற்றும் இறவைப்பயிராக பயிரிட செப்டம்பர்-அக்டோபர் (கார்த்திகை பட்டம்) மாதங்கள் சிறந்த பருவங்கள் ஆகும்.
மண்
வடிகால் வசதியுடன் கூடிய கார, அமிலத் தன்மையற்ற வண்டல், செம்மண் நிலங்கள் மிகவும் உகந்தவை.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை 2-3 முறை கட்டிகள் இல்லாமல் நன்கு புழுதிபட உழ வேண்டும். கடைசி உழவில் 5 டன் மக்கிய தொழு உரமிட்டு உழ வேண்டும். இறவை பயிராக இருந்தால் நீர் பாய்ச்ச ஏதுவாக பார்கள் அமைத்து கொள்ள வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 10 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
விதைநேர்த்தி
ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் திரம் அல்லது கார்பன்டாசிம் கலந்து 4 மணி நேரம் கழித்து விதைக்க வேண்டும். மானாவாரி பகுதியில், விதைப்பதற்கு 3 மணி நேரத்திற்கு முன்னர் 1% பொட்டாசியம் குளோரைடு கொண்டு விதை நேர்த்தி செய்த விதைகளை பருவமழை தொடங்கும் முன் விதைக்க வேண்டும்.
விதைத்தல்
மானாவாரிப் பயிராக இருந்தால் 90 செ.மீ x 60 செ.மீ இடைவெளியிலும், இறவையில் பயிரிட்டால் 90 செ.மீ x 90 செ.மீ இடைவெளியிலும் விதைக்க வேண்டும். டி.எம்.வி.5 குறுகிய கால இரகத்திற்கு 60 X 30 செ.மீ. இடைவெளி இருக்க வேண்டும். விதைகளை 4-6 செ.மீ ஆழத்தில் விதைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
மானாவாரி பயிராக இருந்தால் விதை விதைத்தவுடன் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பிறகு 15 நாட்கள் இடைவெளியில் மண்ணின் தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்ச வேண்டும்.
ஆமணக்கு
உரங்கள்
ஒரு ஏக்கருக்கு மானாவாரி பயிராக இருந்தால் 45 கிலோ தழைச்சத்து, 45 கிலோ மணிச்சத்து, 45 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும். இறவை பயிருக்கு 60 கிலோ தழைச்சத்து, 30 கிலோ மணிச்சத்து, 30 கிலோ சாம்பல் சத்து இட வேண்டும்.
மானாவாரி பகுதிகளில் 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை ஈரப்பதத்திற்கு ஏற்ப மேலுரமாக இடவேண்டும்.
இறவை பகுதிகளில், 100% மணிச்சத்து மற்றும் 50% தழை மற்றும் சாம்பல் சத்தினை அடியுரமாக இட வேண்டும். மீதம் உள்ள தழை மற்றும் சாம்பல் சத்து உரங்களை இரண்டு சம பாகங்களாக பிரித்து விதைத்த 30 மற்றும் 60 வது நாளில் மேலுரமாக இட வேண்டும்.
கடைசி உழவின் போது எக்டருக்கு 30 கிலோ ஜிப்சம் இட வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
விதைத்த 3 நாட்களுக்குள் ஏக்கருக்கு புளுகுனோரலின் 800 மி.லி தெளித்து களைகளை கட்டுப்படுத்தலாம். மருந்து தெளிக்காத போது விதைத்த 20 மற்றும் 40வது நாளில் களைக்கொத்து கொண்டு களை எடுக்க வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
சுருள் பூச்சிகள்
சுருள் பூச்சியை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டை சாறு 5 சதம் (அ) ட்ரைகோபாஸ் 2.5 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
கம்பளி ரோமப்புழு
கம்பளி ரோமப் புழுவை கட்டுப்படுத்த குளோரிபைரிபாஸ் அல்லது மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் முட்புழுவையும் கட்டுப்படுத்தலாம்.
இலைப்பேன்
இலைப்பேனை கட்டுப்படுத்த டைமீத்தேயேட் (அ) மெதில் டெமட்டான் (அ) மோனோகுரோட்டபாஸ் 2 மிலி மருந்தை 1 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளிக்க வேண்டும்.
செதில்பூச்சி
மோனோகுரோட்டபாஸ் 320 மிலி, வேப்பம் எண்ணெய் 1 லி, காதி தூள் 1 கிலோ ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து தெளித்து செதில்பூச்சியைக் கட்டுப்படுத்தலாம்.
நாற்று கருகல்
நாற்று கருகல் நோயைக் கட்டுப்படுத்த காப்பர் ஆக்ஸிகுளோரைடு 3 கிராம் அல்லது மெட்டலக்சில் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆமணக்கு முத்துக்கள் காய்ந்து இருந்தால் அறுவடை செய்யலாம்.
முற்றிய விதைக்கொத்தை இதர கொத்துக்களை பாதிக்காதவாறு அறுவடை செய்ய வேண்டும். விதைகளை நிழலில் குவித்து வைக்காமல் சூரிய ஒளியில் உலர்த்த வேண்டும். காய்ந்த கொத்தை குச்சி கொண்டு அடித்து விதை முத்துக்களை பிரித்தெடுத்து, காற்றில் இட்டு தூசியை நீக்கலாம் அல்லது விதைப் பிரித்தெடுக்கும் கருவி கொண்டு விதைகளைப் பிரித்தெடுக்கவும்.
மகசூல்
மானாவாரியில் எக்டருக்கு 1800 கிலோவும், இறவையில் 3500 கிலோவும் மகசூல் கிடைக்கும்.
பயன்கள்
- ஆமணக்கு விதையின் மேல்தோலை நீக்கி, பருப்பை அரைத்து, பசையாக்கி, கட்டிகளின் மீது பூசிவர கட்டிகள் உடையும்.
- ஆமணக்கு எண்ணெய்யை 5 மி.லி. வீதம் காலையும், மாலையும் உட்கொண்டு வர வாதம், நரம்பு வலி, தசை வலி, முக வாதம் போன்றவற்றிற்கு பயன் தரும்.
- ஆமணக்கு இலையை சிறு துண்டுகளாக நறுக்கிக்கொண்டு, விளக்கெண்ணெய் விட்டு வதக்கி பாதிக்கப்பட்ட இடத்தில் ஒத்தடம் கொடுக்க வீக்கம் குறையும்.
- பல் வலி, ஈறு வலி, ஈறில் இரத்தம் கசிதல் போன்றவற்றில் ஆமணக்கு இலை மற்றும் குச்சியை மென்று சாப்பிட ரத்தக் கசிவு மறையும். ஈறுகள் பலம் பெறும்.
- ஆமணக்குத் துளிரை விளக்கெண்ணெயில் வதக்கித் தொப்புளில் வைத்துக் கட்ட வெப்ப வயிற்று வலி தீரும்.
- சரும வியாதிகள், நரம்பு வலிகள், வீக்கம், தசை வலி, போன்றவற்றில் ஆமணக்கு இலையை அனலில் வாட்டி கட்டி வர நல்ல பலன் தெரியும்.
Velusamy. S says
Welcome to. Castor oil Cultivation in Tamilnadu Formar Impiliments economy