இன்றைய காலகட்டத்தில் பெண்கள் விரும்பும் பூக்களில் ஜாதிமல்லி ஒன்று.
இதற்கு பிச்சிப்பூ என்று மற்றொரு பெயரும் உள்ளது.
இது மிதவெப்ப மண்டலங்களிலும், வெப்ப மண்டலங்களைச் சார்ந்த பகுதிகளிலும் அழகுச் செடியாக வளர்க்கப்படுகின்றது.
வாசனை எண்ணெய் தயாரிக்க ஜாதிமல்லியின் மொக்குகள் பயன்படுகிறது.
ஜாதிமல்லி எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
பெங்களூர், லக்னோ, திம்மாபுரம், கோயம்புத்தூர் ஒயிட், டிரிப்ளாய்டு, மற்றும் தென்காசி ஆகிய இரகங்கள் உள்ளன.
பருவம்
ஜுன் முதல் நவம்பர் மாதம் வரை ஜாதிமல்லியை பயிர் செய்யலாம்.
மண்
நல்ல வடிகால் வசதியுள்ள மணல் கலந்த செம்மண் மற்றும் வண்டல் மண் ஏற்றது. களர், உவர் நிலங்கள் சாகுபடிக்கு உகந்தவை அல்ல. போதிய அளவு வசதியும், சூரிய வெளிச்சமும் இதன் வளர்ச்சிக்கு முக்கியத் தேவையாகும்.
நிலம் தயாரித்தல்
தேர்வு செய்த நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது 30 செ.மீ நீளம், அகலம் மற்றும் ஆழம் உள்ள குழிகள் எடுத்து ஒரு மாதம் ஆற விடவேண்டும். ஒவ்வொரு குழிக்கும் நன்கு மக்கிய தொழு உரம் இடவேண்டும். வரிசைக்கு வரிசை 2 மீட்டர் இடைவெளி, குழிக்கு குழி 1.5 மீட்டர் இடைவெளி விட வேண்டும்.
விதையளவு
பதியன் குச்சிகள் அல்லது வேர்ச்செடிகளை நடவு செய்ய வேண்டும்.
பதியன்களைத் தயார் செய்தல்
பென்சில் பருமனுள்ள நன்றாக முற்றிய தண்டுகளை ஒரு கத்தி கொண்டு தண்டின் ஒரு பகுதியில் இலேசாக மேல் பட்டையைச் சீவி நீக்கிய பின்னர் அத்தண்டினை வளைத்து வெட்டிய பாகத்தினை மண்ணில் புதைக்கவேண்டும். பிறகு நீர் பாய்ச்சவேண்டும். சீவப்பட்ட பகுதியிலிருந்து சல்லி வேர்கள் தோன்றும். மூன்று மாதங்கள் கழித்து பதியன்களை வேர்கள் சேதமடையாமல், மண்ணிலிருந்து எடுத்து, நடவிற்குப் பயன்படுத்தலாம். வளர்ச்சி ஊக்கிகளான இண்டோல் அசிடிக் அமிலம் மற்றும் இண்டோல் ப்யூரிட்டிக் அமிலம் 500 முதல் 1000 பிபிஎம் என்ற அளவில் பயன்படுத்தி வேர் பிடித்தலைத் துரிதப்படுத்தலாம். இம்முறையில் 45 நாட்களில் வேர்கள் தோன்றும்.
விதைத்தல்
பதியன் குச்சிகள் அல்லது வேர்ச்செடிகளை குழியின் மத்தியில் நடவு செய்ய வேண்டும். குறிப்பாக மழைக்காலத்தில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
செடி நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
ஜாதிமல்லி உரங்கள்
செடி ஒன்றிற்கு 10 கிலோ தொழு உரத்துடன் 60 கிராம் தழைச்சத்து, 120 கிராம் மணிச்சத்து மற்றும் 120 கிராம் சாம்பல் சத்து கொடுக்கக்கூடிய உரங்களை ஆண்டிற்கு இருமுறை இரண்டாகப் பிரித்து இடவேண்டும். டிசம்பர் மாதத்தில் கவாத்து செய்தபின் ஒருமுறையும் பின்பு ஜுன் – ஜுலை மாதங்களில் ஒரு முறையும் இடவேண்டும்.
உரமிடும்போது செடியிலிருந்து 30 செ.மீ தள்ளி நன்கு கொத்தி மண்ணுடன் கலக்கச் செய்யவேண்டும். பின்பு தேவையான அளவு நீர் பாய்ச்சவேண்டும்.
ஜாதிமல்லி பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். செடிகளை வருடம் ஒரு முறை அதாவது டிசம்பர் கடைசி வாரத்தில் கவாத்து செய்ய வேண்டும். தரை மட்டத்திலிருந்து 45 செ.மீ உயரம் வரை வெட்டி விடவேண்டும். செடிகளை படரவிடாமல் குத்துச்செடிகளாக வளர்க்கவேண்டும். செடிகள் நடவு செய்து ஓராண்டு கழித்து முதல் முறையாக கவாத்து செய்யவேண்டும்.
பயிர் பாதுகாப்பு
மொட்டுப்புழு
மொட்டுப்புழுவை கட்டுப்படுத்த மானோகுரோட்டோபாஸ் 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும்.
இலை வண்டுகள்
இலை வண்டுகளை மழை வந்தபிறகு விளக்குப் பொறி வைத்து, கவர்ந்து அழிக்க வேண்டும்.
இலைப்புள்ளி நோய்
இலைப்புள்ளி நோயை கட்டுப்படுத்த 2 மில்லி மான்கோசெப் மருந்தை, ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
சிவப்பு சிலந்திப் பூச்சி
சிவப்பு சிலந்திப் பூச்சிகளை கட்டுப்படுத்த நனையும் கந்தகம் 50 சதத்தூளை ஒரு லிட்டர் நீருக்கு 2 கிராம் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
அறுவடை
செடிகள் நட்ட ஒரு வருடத்திலேயே பூக்கள் பூக்க ஆரம்பித்து விடும். ஆனாலும் இரண்டாம் வருடத்திலிருந்து தான் சீராக மகசூல் கிடைக்கும். மொக்குகள் விரிவதற்கு முன்னதாகவே காலை நேரங்களில் பறிக்கவேண்டும். வாசனை எண்ணெய் தயாரிப்பதற்கு மொக்குகள் மலர்ந்த பின்னர் காலை வேளைகளில் பறிக்கவேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 11 டன் பூ மொக்குகள் வரை மகசூலாக பெறலாம்.
ஜாதிமல்லி பயன்கள்:
- பெண்கள் தலையில் சூடிக்கொள்ளும் மணம் மிகுந்த மலராகும்.
- ஜாதிமல்லி மற்றும் முல்லையில் தலா 10 பூக்களை எடுத்து அத்துடன் 2 டீஸ்பூன் பால் சேர்த்து அரைத்து முகம், உடம்பு முழுக்க தடவி 15 நிமிடங்கள் ஊற வைத்து, பிறகு பயத்த மாவு கலந்த குளியல் பொடி உபயோகித்துக் குளிக்கலாம். இது வெயில் காலத்தில் உண்டாகிற அத்தனை சருமப் பிரச்னைகளுக்கும் தீர்வு தரும்.
- வாசனைத் திரவியங்கள் தயாரிக்க பயன்படுகிறது.
Leave a Reply