ஆரம்பத்தில் பசுமாட்டில் இருந்து கிடைக்கும் ஐந்து பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரிக்கப்பட்டது பஞ்சகவ்யா. தொடர்ந்து செய்யப்பட்ட பல்வேறு வயல்வெளி ஆராய்ச்சிகளின் முடிவில் இப்போது கூடுதலாக சில பொருட்களை சேர்த்துள்ளோம்.
இயற்கை விவசாயத்தில் ஒரு முக்கிய வளர்ச்சி ஊக்கியாக செயல்படும் தன்மை கொண்டது பஞ்சகவ்யா இவற்றை நம் வீட்டில் வளர்க்கக் கூடிய பசுவினுடைய 5 பொருட்களை கொண்டு குறைந்த செலவில் தயாரித்து பயிர்களுக்கு தெளிப்பதால் கூடுதல் மகசூலும் கிடைக்கும்.
பஞ்சகவ்யாவின் பயன்கள்
- 75 சதவீதம் பயிர் வளர்ச்சி ஊக்கியாகவும், 25 சதவீதம் பூச்சி விரட்டியாகவும் பயன்படுகிறது
- பஞ்சகவ்யாவை பயன்படுத்துவதால் பயிர் ஓரே சீராக வளர்கிறது
- சுற்றுப்புற சூழல் பாதிப்பு ஏற்படுத்தாது
- பயிர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
- பஞ்சக்கவ்யாவில் 13 வகையான நுண்ணூட்டச் சத்துக்களும் உள்ளது
- கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது
- சைட்டோகைனின் எனும் வளர்ச்சி ஊக்கி, அமினோ அமிலம்
- மற்றும் அனைத்து வகை தாதுக்கள் (மினரல்ஸ்) உள்ளன
- குறைந்த செலவில் தயாரிக்கும் இடுபொருள்கள்
- மண்ணில் நுண்ணுயிரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும்
- காய்கறிகளுக்கு சுவையும், மணமும் கூடும், காய்கறிகள் தரமானதாக இருக்கும் சந்தையில் நல்ல விலை கிடைக்க வாய்ப்புள்ளது
- இதில் நன்மை செய்யும், நுண்ணுயிரிகள் குறிப்பாக பாக்டீரியா, பூஞ்சைகள் உள்ளது
20 லிட்டர் பஞ்சகவ்யா தயாரிப்புக்கான மூலப்பொருட்கள் :
பச்சைப்பசுஞ்சாணம் – 5 கிலோ
பசுமாட்டு சிறுநீர் – 3 லிட்டர்
காய்ச்சி ஆறவைத்த பசும்பால் – 2 லிட்டர்
பசு மாட்டுதயிர் – 2 லிட்டர்
பசு நெய் – 500 கிராம்
நாட்டுச் சர்க்கரை – 1 கிலோ
இளநீர் – 3 லிட்டர்
கனிந்த வாழைப்பழம் – 12
தென்னங்கள் – 2 லிட்டர்
(தென்னங்கள் கிடைக்காதவர்கள் வேறு ஒரு எளிய வழி மூலம் கள் தயாரிக்கலாம். 2 லிட்டர் இளநீரை காற்றுப் புகாமல் பாட்டில் அல்லது கேனில் ஊற்றி மூடி வைத்து பிறகு ஒரு வாரம் கழித்து திறந்து பார்த்தால் அது நொதித்து, கள்ளாக மாறியிருக்கும். அதை பஞ்சகவ்யா கரைசல் தயாரிக்க பயன்படுத்தலாம்.)
முதல் நாள் செய்யவேண்டியது
5 கிலோ பசுமாட்டு சாணத்துடன் 500 கிராம் நெய்யை கலந்து நன்றாக பிசைந்து உருண்டை சேர்த்து 30-50 லிட்டர் அளவு கொண்ட பீப்பாய்க்குள் வைத்து மூட வேண்டும். தொடர்ந்து 3 நாட்கள் சாணம் நெய் கலவை பீப்பாய்க்குள் இருக்கும்.
நான்காவது நாள் மூடியை திறந்து பால், தயிர், இளநீர், பிசைந்த வாழைப்பழம், ஆகிய நான்கு பொருட்களை சாணம், நெய் கலவையினுள் சேர்த்துக் கலக்க வேண்டும். 3 லிட்டர் தண்ணீரில் கலந்து சர்க்கரைத் தண்ணீராக மாற்றி பீப்பாய்க்குள் ஊற்ற வேண்டும். நாட்டு சர்க்கரையை நேரடியாக சேர்க்கக் கூடாது. தொடர்ந்து 10 வது நாள் வரை தினமும் காலை, மாலை ஆகிய இரண்டு வேளைகள் பீப்பாய்க்குள் இருக்கும் கரைசலை திறந்து கலக்கி விடவேண்டும், கலக்கிய பின் மூடிவைக்க வேண்டியது முக்கியம்.
11-வது நாளில் கள்ளை பீப்பாய் கரைசலுக்குள் ஊற்றி தொடர்ந்து 7 நாட்கள் இருவேளை கலக்கி வர வேண்டும்.
19- வது நாளில் பஞ்சகவ்யா தயார். இதை பயிர்களுக்கு பயன்படுத்தலாம்.
பஞ்சகவ்யா கரைசலை 6 மாதம் வரை வைத்திருக்கலாம், வெப்பத்தின் காரணமாக நீர் ஆவியாகி பாகு தன்மை ஏற்படும் பட்சத்தில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரை தண்ணீரை கரைசலுக்குள் ஊற்றினால் மீண்டும் திரவ நிலைக்கு வந்துவிடும்.
பயன்படுத்தும் முறை
பஞ்சகவ்யா அளவு
- 1 லிட்டர் தண்ணீருக்கு 30 மில்லி பஞ்சகவ்யா என்பது பல பயிர்களுக்கு பலமுறை சோதனை செய்து உறுதி செய்யப்பட்ட அளவீடு. இதை கூட்டவோ குறைக்கவோ கூடாது.
- காய்கறி பயிர்களுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி என்ற விகிதத்தில் பூ எடுத்த பின் 15 நாட்களுக்கு ஒருமுறை அதிகாலை அல்லது இளமாலை வேளைகளில் பயிருக்கு தெளிக்க வேண்டும்.
- மரப்பயிர்களான மா, சப்போட்டா, மாதுளை , எலுமிச்சை , நெல்லி, வாழை, பூ எடுப்பதற்கு ஒரு மாதத்திற்கு ஒரு முறையும் பூ எடுத்த பின்பு 15 நாட்களுக்கு ஒருமுறையும் அடிக்கலாம். பிஞ்சு எடுத்த பின்பும் அடிக்கலாம்
- தெளிப்பு உரமாக பயன்படுத்தும்போது கண்டிப்பாக கரைசலை வடிகட்டிய பிறகுதான் தெளிப்பு செய்யவேண்டும்.
விதை நேர்த்தி
- விதை மற்றும் நாற்று நேர்த்தி செய்யவும் பஞ்சகவ்யா பயன்படுகிறது.
- ஒரு கிலோ விதைக்கு 200 மில்லி பஞ்சகவ்யாவை 30 நிமிடம் ஊறவைத்து நடலாம். கெட்டி தோல் உள்ள விதைக்கு 60 நிமிடம் ஊறவைத்து நடலாம்.
- முதலில் சொன்ன அளவீட்டில் விதை அல்லது நாற்றுகளை நனைத்து நிழலில் உலரவைத்து நடவு செய்ய வேண்டும்.
- இப்படிச் செய்வதால் விதைகளில் முளைப்புத் திறன் அதிகரிக்கும். நாற்றுகளில் வேர் சம்பந்தமான நோய் ஏற்படும் வாய்ப்பு குறையும்.
சொட்டுநீர் பாசனம்
- தெளிப்பு மற்றும் பாசன நீர்வழி உரமாக எல்லாவகை பயிர்களுக்கும் பயன்படுத்தலாம்.
- 100 லிட்டர் தண்ணீருக்கு 20 லிட்டர் பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து சொட்டு நீர் பாசனத்தில் விடலாம். எருவில் கலந்து ஊட்டமேற்றி போடலாம்.
- இந்த பஞ்சகவ்யா, தழை, மணி, சாம்பல் சத்துக்களை பயிர்களுக்கு கொடுப்பதுடன், வளர்ச்சி ஊக்கியாகவும், நுண்ணூட்ட சத்துக்களை வேர்களுக்கு அள்ளிக்கொடுக்கும் அமுத சுரபியாகவும் இருக்கும்.
குறிப்பு :
பஞ்சகவ்யா கலவை தயாரிக்கும் பொழுது சரியாக கலக்காமலோ அல்லது இடுபொருளகள்; தரமில்லாமல் இருந்தாலோ பஞ்சகவ்யத்தில் புழுக்கள் வர ஆரம்பிக்கும். அதனை தடுக்க தயாரிக்கும் டிரம்மில் வேப்ப எண்ணெய் தடவி விட்டால் புழுக்கள் வராது. அல்லது 10 மில்லி வேப்ப எண்ணெய் பஞ்சகவ்யாவில் ஊற்றலாம்.
பஞ்சகவ்யாவின் கார அமிலத் தன்மை 6.5 வழ 7.5 இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நொதித்தல் நடைபெற்று பஞ்சகவ்யா தரம் கெட்டுவிடும்.
பாட்டிலில் அடைத்து வைக்கும் போது நொதித்தல் நடைபெற்று பாட்டில் உப்பினால் 20 மில்லி சோற்றுக் கற்றாளைச்சாறு ஊற்றி 6 மாதம் வரை பாதுகாக்கலாம்.
Elangovan says
Terrace garden
Neethu says
வணக்கம் ஐயா . நான் இலங்கை. நான் மூன்று நாட்களாக சேமித்த. மாட்டு சாணத்தில் வெள்ளை நிற . படிவம் உள்ளது . இதன் அறிகுறி என்ன. சாணம் கெட்டு போயிருக்க கூடுமோ என்ற சந்தேகம். விளக்கம் தாருங்கள்