சிறுதானியம் நெல் அரிசியை பண்டிகைக்கு மட்டுமே உண்ணும் காலம் ஒன்று இங்கிருந்தது என்றால் இந்தத் தலைமுறை அதிர்ச்சியடையக்கூடும். காலங்காலமாக நம் முன்னோர்கள் உண்டு வளர்ந்தது நெல் சோறு அல்ல; இன்று சிறுதானியங்கள் என்று நாம் சொல்கிறோமே அவைதான். பெயரில்தான் இது சிறுதானியம். நிலத்தில் போட்டாலும் வயிற்றில் போட்டாலும் இது தரும் பலனால் இது எப்போதுமே பெருந்தானியம்தான். சிறுதானியங்கள் என்பவை முன்னொரு காலத்தில் பயன்படுத்தப்பட்டு இன்று வழக்கொழிந்து போன தேவையற்ற உணவுப் பொருள் அல்ல. அது, நம் தலைமுறையால் கை விடப்பட்ட முன்னோர் கண்ட உயிர் காக்கும் அமுதம். சிறுதானியங்கள் நம் நாட்டில் மட்டுமே உண்ணப்பட்டதும் அல்ல. மங்கோலியா, சீனா, ரஷ்யா உட்பட தெற்காசிய பிராந்தியம் முழுதுமே சிறுதானியங்களைப் பயன்படுத்தி வந்திருக்கின்றன.புல்லரிசியாக வேட்டைச் சமூகங்களுக்கும், மேய்ச்சல் நில நாடோடிகளுக்கும் அவர்களின் கால்நடைச் செல்வங்களுக்கும் காலங்காலமாய் படியளந்தவை இந்த சிறுதானியங்கள்தான்.
வெப்ப மண்டலப் பிரதேசத்தைச் சேர்ந்த இந்த சிறுதானியங்கள், இந்த மண்ணின் தன்மையை தன்னில் கொண்டிருக்கின்றன.அந்தந்தப் பகுதி மக்களுக்கு அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த உணவுதான் ஆரோக்கியம் என்று உணவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள். மேலும், காலங்காலமாக நம் முன்னோர் உண்டு வந்த உணவை நாம் உண்ணும் போது நம் வயிற்றில் உள்ள நல்ல பாக்டீரியாவுக்கும் அது ஏற்றதாக இருப்பதால் நமது செரிமான மண்டலமும் சிறப்பாகச் செயல்படும். எனவே, எப்படிப் பார்த்தாலும் சிறுதானியங்கள் நம் உடலுக்கு ஏற்ற நண்பன்தான். இந்த சிறுதானியங்களை நம் உணவுப் பழக்கமாக மீண்டும் கொண்டு வந்து உடல் வளர்த்து ஊட்டம் பெறுவோம்.கேழ்வரகு, தினை, சாமை, குதிரைவாலி, பனிவரகு, சோளம், கம்பு, வரகு ஆகியவற்றை சிறுதானியங்கள் என்கிறோம்.
இவை சிறுசிறு விதைகளாக இருந் தாலும் மேற்புறம் கடினமான உறைத்தோல் கொண் டிருக்கும். பருவக் காற்றை நம்பியிருக்கும் வானம் பார்த்த பூமியான நம் நிலத்தில் மழை வரும் வரை இதன் விதை பிழைத்திருக்க வேண்டாமா? அதற்குத்தான் இந்த கெட்டித் தோல். கொஞ்சமே கொஞ்சம் நீர் கிடைத்து வேர்பிடித்து விட்டாலும் முளைவிட்டு இது இழை இழையாய் கிளை பிரியும் வேகம் அதிகம்.
மண்ணின் கீழே நீர் எங்கிருந்தாலும் இதன் வேர் இழைகள் தேடிப்பிடித்து நீர் குடிக்கும் வல்லமை உடையவை.ஈரம் இருக்கும் வரை சரசரவென வளரும் இது உலர்ந்த காலங்களில் ஓய்ந்து போனாலும் சாய்ந்து போகாது. மீண்டும் மழை பொழிந்தாலோ நீர் கிடைத்தாலோ மீண்டும் தளிர்க்கும். எல்லா சிறுதானியங்களுக்கும் பக்கத்தூர்விடும் தன்மை உள்ளது. முதல்தூர் பூத்த பிறகு மணி பிடித்து வளரக்கூடிய வகையில் மழையும் வளம் குன்றினாலும் முழுப்பயிறும் பாழாகாது.
மழை கிடைக்க கிடைக்க பக்கத்தூர்கள் வளர்ந்து மணி பிடிக்கும். அப்படியே தானியம் தப்பினாலும் தட்டையாக விளைந்து கால்நடைக்குத் தீவனமாகும். ஒவ்வொரு கதிரிலும் நூற்றுக்கணக்கான தானிய மணிகள் இருக்கும். மற்ற காய்கறிகளுடனும் நிலக் கடலை போன்ற கொட்டை வகை ஊடுபயிராகவோ கலப்புப் பயிராக வளர்ந்து உபரி வருமானம் தருபவை இந்த சிறுதானியங்கள்.மண் வளத்தைக் காப்பதிலும் இந்த சிறுதானி யங்கள் தன்னிகரற்றவை.
இந்தப் பயிர்களின் வேர்கள் மண் அரிப்பைத் தடுக்கும் இயல்புடையவை. வலை போல் பின்னியிருக்கும் இதன் வேர் இழைகள் மண்ணை தன் கரங்களால் இறுகப் பிடித்திருப்பவை. அந்த வேர்கள் மண்ணில் மட்கும்போது அந்த மண் மேலும் வளமாகிறது. இப்படி மண்ணில் இருந்து பெற்ற சத்துகளை மண்ணுக்கே திருப்பித் தந்து அதை தன் எதிர்கால சந்ததிக்குபயன்படுத்திக் கொள்பவை.
சிறுதானிய சாகுபடிக்கு மிகக் குறைந்த நீராதாரமே போதுமானது. வறண்ட நிலங்களிலும் வளரக்கூடியது. பூச்சிக்கொல்லிகள் மற்றும் ரசாயனங்கள் தேவை இல்லை என்பதால் மண் வளமும் கெடாது. இவற்றை உண்பதால் உடலும் கெடாது.
உற்பத்தி செலவு மற்றும் மின்சார உபயோகமும் குறையும்.சிறுதானிய பலன்கள்சிறுதானியங்களில் மாவுச்சத்து எனும் கார்போஹைட்ரேட்தான் பிரதானம். எல்லா தானியங்களிலும் இருப்பது போலவே இதில் மாவுச்சத்து இருந்தாலும் அரிசியில் இருப்பது போன்று மாவுச்சத்து மட்டுமே இருப்பது இல்லை. உடலுக்கு மிகவும் இன்றியமையாத புரதச்சத்து, செரிமானத்துக்கு அவசியமான நார்ச்சத்து, ஊட்டம் தரும் வைட்டமின் சத்துக்கள், தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் ஆகிய அனைத்தும் நிறைந்த ஒரு காம்பேக்ட் உணவுப் பொருளாக இந்த சிறுதானியங்கள் உள்ளன. ரத்தத்தில் சர்க்கரை சேரும் அளவை கிளைசெமிக் இண்டக்ஸ் என்ற அளவால் குறிப்பார்கள்.
அரிசியில் உள்ள மாவுச்சத்தோடு ஒப்பிடும்போது சிறுதானியங்களில் உள்ள மாவுச்சத்து ரத்தத்தில் கரையும் விகிதம் மிகவும் குறைவு என்பதால் இதன் கிளைசெமிக் இண்டக்ஸ் மிகவும் குறைவு. இதனால், சர்க்கரை வியாதி உள்ளவர்களின் நண்பன் என்றே சிறுதானியங்களைச் சொல்லலாம்.
நீரிழிவை உறுதிப்படுத்துவதற்கான சில பரிசோதனைகள் பற்றியும் தெரிந்து கொள்வோம்:சிறுநீரகப் பரிசோதனை வெறும் வயிற்றிலும் சாப்பிட்ட பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படும். இது நோயின் தாக்கத்தைப் பொறுத்து `ப்ளஸ் (+) முதல் நான்கு (++++) ப்ளஸ் வரை அளவிடப்படும்.ரத்தப் பரிசோதனை முறைகள் ரேண்டம் ரத்த சர்க்கரை பரிசோதனை இந்த பரிசோதனையை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.
இதில் ரத்த சர்க்கரை அளவு 120 முதல் 140 மி.கி./டெ.லி. வரை இருந்தால், சரியான அளவு. 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால், அவருக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்று அர்த்தம்.முதன்முறையாக இதை செய்து கொள்பவர்களுக்கு இந்த அளவுகள் 141 முதல் 200 வரை இருந்தால், வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பிறகும் ரத்த சர்க்கரை பரிசோதனைகளை ஒரே நாளில் செய்துகொள்ள வேண்டும்.வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதனை: இரவில் உணவு சாப்பிட்ட பிறகு, சரியாக 8 மணி நேரம் கழித்து வெறும் வயிற்றில் இதை செய்ய வேண்டும்.இதில் ரத்த சர்க்கரை அளவு 80 முதல் 100 மி.கி./டெ.லி. என்று இருந்தால் அது சரியான அளவுதான்.
அதுவே 101 முதல் 125 மி.கி./டெ.லி. என்று இருந்தால், அது நீரிழிவு நோய் வருவதற்கு முந்தைய நிலை. இந்த அளவு 126 மி.கி./டெ.லி. அல்லது அதற்கு மேல் இருந்தால், அவர் ஒரு நீரிழிவு நோயாளி என்பது நிச்சயம்.சாப்பிட்ட பின் ரத்த சர்க்கரை பரிசோதனை: காலையில் வழக்கமான அளவு உணவைச் சாப்பிட்டுவிட்டு, 2 மணி நேரம் கழித்து இந்தப் பரிசோதனை செய்யப்படுகிறது.
இந்தப் பரிசோதனை செய்யும்போது நீரிழிவு உள்ளவர்கள், வழக்கமாக சாப்பிடும் நீரிழிவு நோய் மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். இன்சுலின் போட்டுக் கொள்பவர்கள், வழக்கமான அளவில் இன்சுலினையும் போட்டுக் கொள்ளவேண்டும். அதன்பிறகே இந்தப் பரிசோதனையைச் செய்ய வேண்டும். இதில் ரத்த சர்க்கரை 111 முதல் 140 மி.கி./டெ.லி. என்று இருந்தால் சரியான அளவு.இந்த அளவு 141 முதல் 199 மி.கி./டெ.லி. என்று இருந்தால், 200 மி.கி./டெ.லி.க்கு மேல் இருந்தால் நீரிழிவு உள்ளதாகப் புரிந்துகொள்ளலாம்.
Leave a Reply