11-ம் நூற்றாண்டில் இஞ்சி வர்த்தகத்தில் முதலிடம் வகித்த அரேபியர்கள், வர்த்தக பரிமாற்றத்தில் இஞ்சியை பயன்படுத்தினார்கள்.
பழங்காலத்தில் உலகளவில் பழக்கத்தில் இருந்த பாரம்பரிய மருத்துவ முறையில் 50% மருந்துகள் இஞ்சியையே மூலப்பொருளாக கொண்டிருந்ததாக மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
பலவிதமான காய்கறி மற்றும் மூலிகைகளின் உற்பத்தியில் முதலிடத்தில் இருக்கும் சீனாவை இஞ்சியில் மட்டும் விஞ்சிவிட்டது இந்தியா.
இஞ்சி உணவின் ருசி கருதி, இந்திய, சீன உணவுகளில் சேர்த்துக் கொள்ளப்படும் ஒரு முக்கிய நறுமண பொருளாகும்.
எப்படி பயிரிடுவது…?
- ரியோ – டி – ஜெனிரோ, மாரன் நடன், சுருச்சி, சுபிரபா, சுரவி, ஐஐஎஸ்ஆர், வராதா, ஐஐஎஸ்ஆர் மகிமா, ஐஎஸ்ஆர், ரிஜாதா அதிரா மற்றும் கார்த்திகா ஆகிய இரகங்கள் உள்ளன.
- நல்ல வடிகால் வசதியுள்ள அங்ககப் பொருட்கள் நிறைந்த மணல், களிமண் கலந்த குறுமண், சிவப்பு குறுமண் நிலங்களில் நன்கு வளரும்.
- மே – ஜூன் மாதங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
- இஞ்சி கரணைகளை சிறு சிறு துண்டுகளாக வெட்டி இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு எக்டருக்கு 1500-1800 கிலோ இஞ்சி கரணைகள் தேவைப்படும்.
- இஞ்சி பயிரை சாகுபடி செய்ய பிப்ரவரி-மார்ச் மாதம் கோடைக்கால மழை கிடைத்தவுடன் நிலத்தை 4-5 முறை நன்றாக உழுது தயார் செய்ய வேண்டும். நிலத்தை நன்றாக கொத்தி பதமாக்க வேண்டும். அதன்பின் 15 செ.மீ உயரம், 1 மீட்டர் அகலம் மற்றும் தேவையான நீளம் வைத்து பாத்திகளுக்கிடையே 40 முதல் 50 செ.மீ இடைவெளியில் பார் அல்லது மேட்டுப்பாத்தி அமைக்க வேண்டும்.
- மாங்கோசெப் 0.3 சதம் மற்றும் மாலத்தியான் 0.1 சதம் ஆகிய மருந்துக்கலவையில் 30 நிமிடம் கரணைகளை ஊறவைக்க வேண்டும். பாக்டீரியா வாடல் நோய் இருக்குமானால் விதைக்கரணைகளை 200 பிபிஎம் ஸ்ட்ரெப்டோசைக்ளின் மருந்துக்கரைசலில் (30 லிட்டர் தண்ணீரில் 6 கிராம் மருந்து) விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
- கோடைமழை கிடைத்தவுடனே இஞ்சி நடவு செய்ய வேண்டும். 20-25 கிராம் எடை மற்றும் 2.5 -5 செ.மீ நீளம் உள்ள கரணைத்துண்டுகளைப் பாத்திகளில் 50 செ.மீ x 50 செ.மீ (அ) 25 செ.மீ x 25 செ.மீ இடைவெளி அமைத்து சிறு குழிகளில் நடுதல் வேண்டும். திடகாத்திரமான ஒரு மொட்டாவது மேல்நோக்கி இருக்குமாறு நடவேண்டும்.
- நட்டவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் மண்ணின் தன்மைக்கேற்ப நீர் பாய்ச்ச வேண்டும். மேலுரம் இடும்போது மண் அணைத்து நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- ஒரு எக்டருக்கு தொழு உரம் 25 முதல் 30 டன் மற்றும் தழை, மணி, சாம்பல் சத்துக்கள் முறையே 75, 50 மற்றும் 25 கிலோ இடவேண்டும். மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்தை முழுவதும் அடியுரமாக இட வேண்டும். தழைச்சத்தை கரணைகளை விதைத்த 45வது நாளிலும், மறு பாதியை 90வது நாளிலும் மேலுரமாக இடவேண்டும்.
- நன்கு சிதைந்த மாட்டு சாணி (அ) கம்போஸ்ட் ஒரு எக்டருக்கு 5-6 டன் என்ற அளவில் குழிகளில் கிழங்குகளை நடும் போது இட வேண்டும். மேலும், வேப்பங்கட்டியை ஒரு எக்டருக்கு 2 டன் என்ற அளவில் அளிப்பதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
- களை அதிகமாக இருந்தால் கைக்களை எடுக்க வேண்டும். நட்ட 5 மற்றும் 6வது மாதங்களில் மீண்டும் களை எடுக்க வேண்டும். நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
- இஞ்சி காய்கறிக்காக பயன்படுத்துவதாக இருந்தால் ஆறு மாதத்தில் அறுவடை செய்ய வேண்டும். சுக்கு (உலர்ந்த இஞ்சி) தயாரிக்க பொதுவாக 245 முதல் 260 நாட்களில் (இலைகள் மஞ்சள் நிறமாக மாறும்போது) அறுவடை செய்ய வேண்டும். சுத்தம் செய்ய கரணைகளை நீரில் கழுவி கூர்மையான மூங்கில் கொண்டு தோலை அகற்றி சுத்தமான தரையில் சீராக பரப்பி 3-9 நாட்கள் காயவைக்க வேண்டும். அவ்வப்போது அவற்றை புரட்டிவிட வேண்டும்.
- ஒட்டிக்கொண்டிருக்கும் தோலை அகற்றி பின் பைகளில் நிரப்பி குளிரான இடத்தில் சேமிக்க வேண்டும்.
- விதைப் பயன்பாட்டிற்காக அறுவடை செய்தவுடனேயே பூச்சி, நோயுற்ற விதைக் கிழங்குகளை தேர்ந்தெடுக்க வேண்டும். விதைக்கிழங்குகளை குழிகளில் வைத்து வெயில், மழை படாதவாறு பாதுகாக்க வேண்டும். குழிகளின் பக்கச் சுவர்களில் சாணத்தை பூச வேண்டும். விதைக் கிழங்குகளை குழிகளில் வைக்கும் போது உலர் மணல் (அ) மரத்தூள் கொண்டு அடுக்கடுக்காக அமைக்க வேண்டும். குழிகளின் மீது காற்றோட்டத்திற்காக போதுமான இடைவெளி விட்டு மரக்கட்டை கொண்டு மூட வேண்டும். 20 நாட்களுக்கு ஒரு முறை குழிகளை ஆய்வு செய்ய வேண்டும். மணல் (அ) நெல் உமி, காய்ந்த இலைகள் கொண்டு கிழங்குகளை மூடலாம்.
- ஒரு எக்டருக்கு 20-25 டன்கள் இஞ்சி மகசூலாகக் கிடைக்கும்.
பயன்கள்
- ஜலதோஷத்தின் நோய்க்காரணியான வைரஸைத் தாக்கி அழிக்கும் தன்மை கொண்டது. தலைவலியைப் போக்குகிறது.
- இரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது.
- தோலில் உண்டாகும் உலர்சருமம், காயங்கள், சிரங்குகள் போன்றவற்றிக்கும் இது நல்ல மருந்தாகும்.
- இஞ்சியானது பசியைத் தூண்டுவதுடன், தேவையற்ற கழிவுகளை வெளிக்கொணர உதவுகிறது. உடலின் ஜீரண உறுப்புகள், சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்டவை இஞ்சி சாறு மூலம் சுத்தப்படுத்தப்படுகிறது.
- பெரும்பாலான நோய்களுக்கு காரணமாக இருக்கும் மலச்சிக்கலை அறவே அகற்றி உடலுக்கு புத்துணர்ச்சியை தருகிறது.
- பொதுவாக அசைவ உணவு வகைகளை சமைக்கும்போது, வெள்ளைப்பூண்டும், இஞ்சியும் அதிக அளவில் சேர்த்து சமைப்பார்கள். இஞ்சியின் மருத்துவ குணங்களில் முக்கியமான ஒன்று உடலின் ஜீரணத்தை துரிதப்படுத்துவது ஆகும்.
- இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு சம்பந்தமான நோய்கள் தீரும்.
A Murugesan says
VERY NICE INFORMATION NEWLY LEANER OF AGRICULTURE
THANKING YOU
A MURUGESAN
Navinkumar V says
நன்றி நண்பரே
துரை. மணிகண்டன்ன். says
வணக்கம் அன்பரே. என் வீட்டு தோட்டத்தில் இஞ்சி வுவசாயம் செய்ய ஆசை. விதைஇஞ்சி, இங்கு பொள்ளாச்சி பகுதியில் எங்கு கிடைக்கும்? நாமே விதைஇஞ்சி உருவாக்க இயலுமா?. அரசு கடனுதவி/மானியங்கள் பற்றிய விவரங்கள் கிடைப்பின் மிக்க மகிழ்ச்சி.