உளுத்தம்பருப்பு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
அரிசி – 1 கப்
உளுத்தம் பருப்பு – 1/2 கப்
பூண்டு – 10 பற்கள் (பொடியாக நறுக்கியது)
வெந்தயம் – 1 டீஸ்பூன்
தண்ணீர் – 5 கப்
சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
துருவிய தேங்காய் – 1/2 கப்
பால் – 1/2 லிட்டர் (கொதிக்க வைத்தது)
செய்முறை:
முதலில் அரிசி மற்றும் உளுத்தம் பருப்பை நன்கு கழுவி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசி, உளுத்தம் பருப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, அத்துடன் பூண்டு, வெந்தயம் சேர்த்து, குக்கரை மூடி 5 விசில் விட்டு, தீயை குறைத்து 10 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
பின்பு குக்கரை திறந்து, மத்து கொண்டு லேசாக கடைந்து, பின் சுக்கு பொடி, உப்பு, துருவிய தேங்காய் சேர்த்து கிளறி, கொதிக்க வைத்த பாலை ஊற்றி நன்கு கிளறி இறக்கினால், உளுந்து கஞ்சி ரெடி!!! இதனை ஏதேனும் துவையலுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.
இது ஊட்டச்சத்து நிறைந்தது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு காலையிலோ, மாலையிலோ வழங்குங்கள். தசைகள் பலம் பெறும். மெலிந்த குழந்தைகளுக்கு அடிக்கடி இந்த கஞ்சயை தயார் செய்து கொடுங்கள். வயதானவர்கள் மாலை நேரத்தில் இந்த கஞ்சியை சாப்பிட வேண்டும். இது மலச்சிக்கலை போக்கும்.
உளுந்து பயன்கள்:-
- கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்கள் உளுந்தை களியாகவோ, கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.
- உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.
- உளுந்து வடை பசியை போக்குவதுடன் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். பித்தத்தைக் குறைக்கும் தன்மை கொண்டது.
- சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.
- நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
- உளுந்து ஊற வைத்த நீரை மறுநாள் அதிகாலை அருந்தி வர சிறுநீர் சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.
- 4 தேக்கரண்டி உளுந்து மற்றும் 2 தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து அரைத்து பேஸ்ட் செய்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை தீரும்.
Leave a Reply