கொத்தமல்லி ஒரு சிறு செடி வகையைச் சார்ந்தது. கொத்தமல்லி அல்லது மல்லி ஒரு மூலிகையாகவும், சமையலுக்கு பயன்படும் ஒரு சுவைப்பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது.
இஸ்ரேலில் கண்டெடுக்கப்பட்ட சில கொத்தமல்லி விதைகள் 8000 ஆண்டுகள் பழமையானவை எனக் கருதப்படுகின்றன. இச்செடி 50 செ.மீ உயரம் வளரக்கூடியது.
இந்திய முழுவதும் கொத்தமல்லி பயிரிடப்படுகிறது.
பயிரிடும் முறை:
- ஜூன் – ஜூலை மற்றும் அக்டோபர் – நவம்பர் மாதங்கள் கொத்தமல்லி சாகுபடிக்கு சிறந்த பருவங்கள் ஆகும்.
- நல்ல வடிகால் வசதி உள்ள இரு மண்பாட்டு நிலம் பயிரிட மிகவும் ஏற்றது. மண்ணின் அமில காரத் தன்மை 6 – 8 வரை இருக்க வேண்டும். மானாவாரியாகப் பயிரிட ஈரமான கரிசல் மண் ஏற்றது. வெப்பநிலை சராசரியாக 20 – 25 செல்சியஸ் இருந்தால் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
- நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை உழுது பண்படுத்த வேண்டும். பிறகு இறவை பயிராக இருந்தால் நீர் பாய்ச்சும் தன்மைக்கேற்ப பாத்திகள் அமைத்துக்கொள்ள வேண்டும்.
- ஒரு எக்டருக்கு இறவையாக பயிரிட 10 – 12 கிலோவும், மானாவாரியாக பயிரிட 20 – 25 கிலோ விதைகளும் தேவைப்படும். கொத்தமல்லி விதைகளை இரண்டாக உடைத்து விதைக்க வேண்டும். உடைக்காமல் முழு விதைகளை நடவு செய்தால் விதைகள் முளைக்காது.
- விதைப்பான் மூலம் விதைகளை 20 x 15 செ.மீ இடைவெளியில் விதைக்கவேண்டும். விதைகள் 8 – 15 நாட்களுக்குள் முளைத்துவிடும். மானாவாரி சாகுபடியில் விதைகளைத் தூவும் முறையில் விதைத்து விட்டு நாட்டு கலப்பை கொண்டு மூடிவிட வேண்டும்.
- இறவை பயிராக இருந்தால் விதைத்தவுடன் நீர் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். அதன் பின்னர் 7 முதல் 10 நாட்களுக்கு ஒரு முறை நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
- ஒரு எக்டருக்கு 10 கிலோ தொழு உரம் கடைசி உழவின் போது இடவேண்டும். விதைப்பதற்கு முன் இறவை மற்றும் மானாவாரிப் பயிர்களுக்கு 10 கிலோ தழைச்சத்து, 40 கிலோ மணிச்சத்து, 20 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும்.
- இறவைப் பயிருக்கு மட்டும் விதைத்த 30வது நாள் எக்டருக்கு 10 கிலோ தழைச்சத்து கொடுக்கக்கூடிய உரத்தை மேலுரமாக அளிக்கவேண்டும்.
- விதைத்த 30வது நாளில் செடிகளைக் கலைத்து விடுவதன் மூலம் கீரைகளாக அறுவடை செய்யலாம். சாதாரணமாக விதைத்த 90 முதல் 110 நாட்களில் விதைகளை அறுவடை செய்யலாம். காய்கள் நன்கு பழுத்தவுடன், காயின் நிறம் பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் கலந்த பழுப்பு நிறமாக மாறும் போது அறுவடை செய்ய வேண்டும்.
- மானாவாரி சாகுபடியில் 300-400 கிலோ விதைகள், இறவையில் 500-600 கிலோ விதைகள் கிடைக்கும். கீரையாக அறுவடை செய்தால் 6-7 டன்கள் வரை கிடைக்கும்.
பயன்கள்
- இதில் விட்டமின் ‘A’ சத்து உள்ளதால், கண் பார்வை தெளிவாகிறது. விட்டமின் ‘C’ சத்தும் இந்த கீரையில் அதிகம் உள்ளதால் உடலில் ஏற்படக்கூடிய சொறி, சிரங்கு, அரிப்பு போன்ற தோல் நோய்களை குணமாக்கும் தன்மை உள்ளது.
- இது ஜீரணத்தை தூண்டுகிறது. வாந்தி மற்றும் விக்கலை தடுக்கிறது.
- கொத்தமல்லி சாற்றில் கருஞ்சீரகத்தை ஊறவைத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் ஒரு கிராம் அளவு தேனில் குழைத்து சாப்பிட்டு வர பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்சனைகள் குணமாகும்.
- எலும்புகள், பற்கள் ஆகியவற்றிற்கு தேவையான கால்சியம் சத்து இதில் உள்ளது. நோயாளிகளுக்கு நாக்கு ருசி மாறி, வாய்க் கசப்புத்தன்மை ஏற்பட்டுவிடும். அவர்கள் இந்தக்கீரையை துவையல் செய்து சாப்பிட்டால், நாக்கு ருசி பழைய நிலைக்கு வந்துவிடும்.
- சொறி, சிரங்கு, அரிப்பு உள்ளவர்கள் கீரை 50 கிராம், வெந்தயம் 10 கிராம், மிளகு 5 கிராம் எடுத்துக்கொண்டு இவற்றுடன் எலுமிச்சை சாறு தேவையான அளவு இட்டு அரைத்து புண்கள் மேல் தடவி வர விரைவில் குணமாகும்.
- உடல் சூட்டைக் குறைக்க கொத்தமல்லியை ஒரு கைபிடி எடுத்து நன்கு கழுவி மென்று சாப்பிட்டு வர உடல் சூடு குறையும்.
C.Chandrasekar says
Very nice
Saras says
Super enaku vivasayam rompa pidikum
Nathiya says
Boss chinatha vtla thotila vaika easy ah soli thanga,,enak interest undu,but ithula solrathu velaiku aagathu