கொலுமிச்சை குளிர்ச்சி தரும் கனியாகும். உலகம் முழுவதும் பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
தமிழ்நாடு, ஆந்திரா, மத்திய பிரதேசம், கர்நாடகம், அசாம், குஜராத், மராட்டியம், பஞ்சாப், உத்திர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்களில் கொலுமிச்சை சாகுபடி செய்யப்படுகிறது.
உலகில் ஏறக்குறைய 50 நாடுகளில் கொலுமிச்சை பயிரிடப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
இதில் பெரும்பாலும் நாட்டு இரகங்கள் தான் நடவிற்கு பயன்படுத்தப்படுகின்றன.
பருவம்
அனைத்து மாதத்திலும் நடவு செய்யலாம். கார்த்திகை மாதம் ஏற்றது.
மண்
மணல் அல்லாத அனைத்து மண் வகைகளிலும் சாகுபடி செய்யலாம்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். கடைசி உழவின் போது 10 டன் தொழு உரம் இட்டு மண்ணுடன் கலந்து உழவு செய்ய வேண்டும். 7.5 செ.மீ நீள, அகல, ஆழமுள்ள குழிகளில் கலப்பு உரம் மற்றும் மேல்மண் ஆகியவற்றை கலந்து இட்டு ஆற விட வேண்டும்.
விதை
விதைகள் மூலம் வளர்ந்த செடிகள் மற்றும் ஒட்டு கட்டிய செடிகள் நடவிற்கு பயன்படுகின்றன.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் தரமான கன்றுகளை தேர்வு செய்து குழிகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நடவு செய்யும் போது நீர் பாய்ச்ச வேண்டும். பின்பு மூன்றாம் நாள் உயிர்த்தண்ணீர் பாய்ச்ச வேண்டும். இது பெரும்பாலும் மானாவாரியாக வளரும் தன்மை கொண்டது. காய்ச்சலும், பாய்ச்சலுமாக நீர் பாய்ச்சினால் போதுமானது.
உரங்கள்
மூன்று ஆண்டுகள் வரை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மரத்தின் அடிப்பகுதியில் இருந்து, ஒரு அடி இடைவெளி விட்டு அரையடி விட்டத்தில் வட்டப்பாத்தி எடுத்து 2 கிலோ ஆட்டு எரு, அரை கிலோ மண்புழு உரம், தலா 200 கிராம் வீதம் யூரியா, பொட்டாஷ், டி.ஏ.பி, ஜிப்சம் ஆகியவற்றை சேர்த்து கலந்து வைக்க வேண்டும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அடிப்பகுதியில் இருந்து இரண்டு அடி இடைவெளிவிட்டு இதேபோல் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை உரம் வைத்து வர வேண்டும். 0.5 சதம் ( 500 கிராம் / 100 லிட்டர் தண்ணீர்) துத்தநாக சல்பேட்டை, புதிய இலைகள் தோன்றியவுடன் ஆண்டிற்கு மூன்று முறை மார்ச், ஜீலை மற்றும் அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.
வளர்ச்சி ஊக்கிகள்
என்.ஏ.ஏ என்ற வளர்ச்சி ஊக்கி மருந்தை 20 பி.பி.எம் என்ற அளவில் இரண்டு முறை தெளிக்கவேண்டும். இவ்வாறு தெளிப்பதால் பிஞ்சுகள் உதிர்வது தடுக்கப்பட்டு காய்ப்பிடிப்பு அதிகரிக்கும்.
பூ பூக்காத மரங்களுக்கு 0.5 சத யூரியா கரைசல் ( 5 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) அல்லது 1 சதவீத பொட்டாசியம் நைட்ரேட் ( 10 கிராம் லிட்டர் ஒன்றுக்கு) கரைசல் தெளிக்கவேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். முதல் இரண்டு வருடங்களுக்கு அதிக கிளைகள் தோன்றாதவாறு கவாத்து செய்ய வேண்டும். பின்னர் ஒவ்வொரு வருடமும் தேவையில்லாத, நோய்வாய்ப்பட்ட, காய்ந்த கிளைகளை நீக்கி விட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
அசுவினி
இதை கட்டுப்படுத்த ஒரு மி.லி மீத்தைல் டெமட்டான் அல்லது மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
நுனி கருகல்
காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தவேண்டும். 0.3 சதம் காப்பர் ஆக்ஸ்குளோரைடு (அல்லது) கார்பன்டசிம் 0.1 சதம் மருந்தை ஒரு மாத இடைவெளியில் தெளித்துக் கட்டுப்படுத்தலாம்.
அறுவடை
நன்கு திரண்ட காய்களை அறுவடை செய்ய வேண்டும். காய்கள் கரும்பச்சை நிறத்தில் இருந்து மஞ்சள் கலந்த நிறத்திற்கு மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு ஏக்கருக்கு 20 டன் பழங்கள் வரை கிடைக்கும்.
ஊடுபயிர்
எலுமிச்சையை ஊடுபயிராக பயிர் செய்யலாம்.
பயன்கள்
- இதன் இலைகளை நீரில் போட்டு அந்நீரை கொண்டு வாய் கொப்பளிப்பதால் ஈறுகளில் உள்ள கிருமிகளை நீக்கி ஈறுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
- இதில் இருந்து எடுக்கப்படும் என்ணெயானது இரத்தம் மூலம் பரவும் நோய்களை குணப்படுத்தும் மருந்துகளில் பயன்படுகிறது.
- இரைப்பை பெருங்குடல் புற்றுநோய், மூல நோய், இரைப்பை புண் போன்றவற்றை தடுக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
- அஜீரணம் ஆகாமல் அவதிபடுபவர்கள் இதன் பழச்சாற்றை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். மலச்சிக்கல் பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணியாக செயல்படுகிறது.
Shanmugaraj says
இயற்கை முறையில் சாகுபடி செய்ய வழி முறை….. உள்ளதா?
Shanmugaraj says
எலுமிச்சை நாட்டு மரக்கன்றுகள் எங்கு கிடைக்கும்