நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் அரைக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- விதைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, மண்புழு உரம் ஒரு பங்கு ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, அரை அடி ஆழத்திற்கு மேல் நிரப்பினால் போதுமானது.
விதைத்தல்
விதைகளை மணல் கொண்டு கலந்து பைகளில் தூவி கிளறி விட வேண்டும். விதைகள் சிறியதாக இருப்பதால் மணல் கொண்டு விதைத்தால் சீராக விழும். பின்னர் அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
பூச்சிகளிடமிருந்து காக்க அடுப்பங்கரை குப்பை மற்றும் பஞ்சகாவ்யா போதுமானது. டீத்தூள், முட்டை ஓடு, மக்கிய காய்கறி கழிவுகளை உரமாக போடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.
அறுவடை
கீரைகளை இளம் தளிராக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும்.
பயன்கள்:
- உயிர்ச் சத்தான வைட்டமின்களும், தாது உப்புகளும் அதிக அளவு இக்கீரையில் உள்ளன.
- தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.
- உடலில் வைட்டமின் குறைப்பாட்டால் ஏற்படும் நோய்களை இது தடுக்கும் தன்மை கொண்டது.
- இந்தக் கீரையுடன் பெருங்காயமும், வெங்காயமும் சேர்த்துக் செய்த பொரியலானது ஜலதோஷம், ஜன்னி, குளிர்க்காய்ச்சல் ஆகியவைகளை நீக்கும்.
- இக்கீரையை உணவில் சேர்த்து வர வாய்வு கோளாறுகள், வாத வலி நீங்கும்.
- அரைக்கீரை விதையை நல்லெண்ணெய் விட்டுக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொண்டு, தலைக்குத் தடவிவர தலைமுடி கருமையாகவும், செழிப்பாகவும் வளரும்.
Leave a Reply