நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் ஊசிமல்லி (முல்லை) பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 50 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
- பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
- கவாத்து உபகரணங்கள்
தொட்டிகள்
இதில் அடியுரமாக மண், தென்னை நார்க்கழிவு, இயற்கை உரம் என மூன்றையும் சம அளவில் கலந்து நிரப்பி, தொட்டியை ஒரு வார காலத்திற்கு ஆற விட வேண்டும்.
செடிகள் வளர்ப்பதற்காக உரங்களை நிரப்பும் பொழுது, அதன் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இது நீண்ட காலச் செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்க்க வேண்டும். அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
விதைத்தல்
வேர் விட்ட குச்சிகளை மையத்தில் நடவு செய்ய வேண்டும். வேர்ப்பகுதி முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
செடிகளை ஊன்றியவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
செடிக்கு தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட்டு நீர் ஊற்ற வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இது அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றும்.
பயன்படுத்தும் இடங்கள்
இதன் தொட்டியை சுவற்றின் அருகில் சிறு கற்களை இட்டு அதன் மீது வைக்க வேண்டும். அப்பொழுது தான் செடிகளை சுவற்றின் மீது படர விட ஏதுவாக இருக்கும்.
அந்திமாலை நேரத்தில் அந்த செடி முழுவதும் பூக்கள் மலர்ந்து இருப்பது பார்ப்பதற்கு அழகாக இருக்கும். அதிலும் சுவற்றின் மீது படர்ந்து இருந்தால் அதன் அழகே அற்புதமானது தான்….!!
ஊசிமல்லி பயன்கள்:
- முல்லைப்பூவின் சாறு பிழிந்து 3 துளி மூக்கில் விட தீராத தலைவலிகள் தீரும்.
- முல்லைப்பூவின் சாறு 2 அல்லது 3 துளிகள் கண்ணில் விட்டு வர கண்பார்வை குணமாகும்.
- ஒரு கைப்பிடி அளவு முல்லைப் பூவை நீர் விட்டுக் காய்ச்சி பாதியாக வற்றியதும் 15 மில்லி அளவு குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.
- முல்லை மலரை தலையில் சூடிக் கொண்டு, அதன் மணத்தை முகர்ந்தால் மனவியாதிகள் நீங்கி மனத்தெளிவு உண்டாகும் என்றும் கூறப்படுகிறது.
Leave a Reply