நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் கனகாம்பரம் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti.
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
- விதைகள், குழித்தட்டுகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
பைகளில் அடியுரமாக மண், தென்னை நார்க்கழிவு, இயற்கை உரம் ஆகியவற்றை சம அளவு கலந்து வைக்க வேண்டும்.
செடிகள் வளர்ப்பதற்காக உரங்களை பைகளில் நிரப்பும் பொழுது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
குழித்தட்டுகளில் தென்னை நார்க்கழிவுகளை நிரப்பி அதில் குழிக்கு ஒரு விதை வீதம் விதைக்க வேண்டும். விதைத்தவுடன் நீர் தெளித்து செய்திதாள்களை கொண்டு மூடி விட வேண்டும். விதை முளைத்தவுடன் நீக்கி விடலாம். 25 முதல் 30 நாட்கள் ஆன நாற்றுகளை நடவு செய்ய வேண்டும்.
பைகளில் அல்லது தொட்டிகளில் நாற்றுகளை அவற்றின் இடவசதிக்கு ஏற்றவாறு நடவு செய்ய வேண்டும். இதில் மூன்று வண்ணங்கள் உள்ளதால் கலந்து நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தென்னை நார்க்கழிவு இருப்பதால் ஈரப்பதத்தை கண்காணித்து நீர் ஊற்ற வேண்டும். பைகளின் அடியில் துளை இடுவதால் அதிகப்படியான நீர் இருந்தால் வெளியேறிவிடும்.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்து தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
செடிகள் வளர்ந்தவுடன் கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் செடியில் பக்கக்கிளைகள் தோன்றும்.
பயன்படுத்தும் இடங்கள்
இதன் தொட்டிகளுக்கு வண்ணங்கள் பூசினால் அழகாக இருக்கும். இதை முன் வரவேற்பறை அல்லது வாசலின் பக்கவாட்டில் வைக்கலாம்.
கனகாம்பரம் பயன்கள்
- மாலைகளில் பிற மலர்களுடன் சேர்த்துப் பிண்ணவும், வழிபாட்டின் போது பயன்படுகிறது.
- அலங்காரப் பொருட்களிலும் கனகாம்பரம் பூவை பயன்படுத்தலாம்.
- கனகாம்பரம் பூவை தலையில் சூடுவதால் தலைவலி, ஒற்றை தலைவலி வருவதில்லை.
- கனகாம்பரம் மாலை அணியும் போது நம் இருதயத்தின் சக்தியால் இது உடல் முழுவதும் பரவுகிறது. பிராண சரீரம் பலம் பெறுகிறது. இனம் புரியாத மகிழ்ச்சி ஏற்படுகிறது.
Leave a Reply