நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் கீழாநெல்லி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா, வேப்பந்தூள்.
- விதைகள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இச்செடி வளர்வதற்கு அளவு, வடிவம் என்று எதுவும் தேவைப்படாது. செடிகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என இந்த மூன்றையும் கலந்து வைக்க வேண்டும். இந்த கலவை தயாரானதும் 10 நாட்கள் கழித்து, கலவை நன்கு மக்கியதும் விதைப்பை மேற்கொள்ள வேண்டும்.
விதைத்தல்
விதைகளை சிறிய பைகளில் விதைக்க வேண்டும். தினமும் தண்ணீர் தெளிக்க வேண்டும். விதைகள் முளைக்கும் வரை செய்திதாள்களை கொண்டு மூட வேண்டும். விதைகள் முளைத்த பின் நீக்கி விடலாம். 20 நாட்கள் ஆன நாற்றுகளை தொட்டியின் அல்லது பைகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும். நடும் இடைவெளியானது பைகளின் அளவை பொறுத்து மாறுபடும்.
நீர் நிர்வாகம்
நாற்று நட்டவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பைகளை உபயோகப்படுத்தினால் அதன் அடியில் இரு துளைகளை இட வேண்டும். ஏனெனில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் துளை வழியே வெளியேறி விடும்.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
சமையலறை கழிவுகளை மட்கச்செய்து உரமாக போடலாம்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும்.
வேப்ப இலைகளை நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
அறுவடை
இது பல மருத்துவ பயன்களை கொண்டுள்ளதால், பல்வேறு நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது. நடவு செய்த 80 நாட்களில், அறுவடை செய்து பயன்படுத்தலாம்.
கீழாநெல்லி பயன்கள்
- நன்கு வளர்ந்த கீழாநெல்லி செடியின் இலையை நன்கு அரைத்து, சுத்தமான வெள்ளாட்டுப் பாலில் கலந்து பத்து முதல் பதினைந்து நாட்கள் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மஞ்சள் காமாலை குணமாகி விடும்.
- கீழாநெல்லி கீரையை உடலில் தேய்த்து ஊற வைத்து பிறகு குளித்தால் அரிப்பு சம்பந்தமான நோய்கள் வராது.
- குளிர் காய்ச்சலுக்கு கீழாநெல்லி ஒரு பங்கும், மிளகு அரை பங்கும், வெள்ளைப் பூண்டு அரை பங்கும் சேர்த்து நன்றாக அரைத்து மிளகு அளவில் மாத்திரைகளாகச் செய்து காலை மாலை சாப்பிட காய்ச்சல் குணமாகும்.
- கீழா நெல்லியுடன் சம அளவு கரிசலாங்கண்ணிச் சேர்த்து அரைத்து பசும் பாலுடன் 45 நாட்கள் சாப்பிட கல்லீரல் தொடர்பான நோய்கள், சோகை, இரத்தமின்மை ஆகியவை குணமாகும்.
- கீழாநெல்லி இலை, பொன்னாங்கண்ணி இலை, சம அளவு அரைத்து மோரில் சேர்த்து 45 நாட்கள் சாப்பிட்டால் மாலைக்கண், பார்வை மங்கல் நோய்கள் குணமாகும்.
Leave a Reply