நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித் தோட்டம் கோவக்காய் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti.
- அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்ப எண்ணெய், பஞ்சகாவ்யா.
- நடுவதற்கு தேவையான தண்டுக்குச்சிகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
- பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்
தொட்டிகள்
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்பலாம். இது அதிக ஆண்டு பலன் தர கூடியது. ஆகவே அடியுரம் அதிக சத்துள்ள இயற்கை உரமாக இருத்தல் நலம். இந்தக் கலவை தயாரானதும் உடனே விதைக்க கூடாது. 10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். இது கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
நோய் தாக்காத செடிகளில் இருந்து தண்டுகுச்சிகளை தேர்வு செய்ய வேண்டும். ஒரு பையில் 2 தண்டுகுச்சிகள் வரை ஊன்றலாம். நடுவதற்கு முன் சாணிப்பாலில் நனைத்து நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
குச்சிகளை ஊன்றியவுடன் நீர் தெளிக்க வேண்டும். கோடைக் காலத்தில் ஒரு நாளைக்கு இரண்டு முறை நீர் ஊற்ற வேண்டும். தென்னைநார்க் கழிவைப் பயன்படுத்துவதால் (அது இயற்கையாகவே தண்ணீரைத் தக்கவைக்கும் தன்மை கொண்டிருப்பதால்) பொதுவாக ஒருமுறையும் கோடைக் காலத்தில் இரண்டு முறையும் செடிகளுக்கு நீர் ஊற்ற வேண்டும்.
செடிகளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்போது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.
பந்தல் முறை
இதற்கு பந்தல் அமைக்க நான்கு சாக்குகளில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும்.இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். இது அதிக ஆண்டுகள் பயன் தரக்ககூடியது. எனவே அமைக்கும் பந்தல் உறுதியாக இருக்க வேண்டும்.
மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம்.
உரங்கள்:
வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
அவ்வப்போது காய்ந்து பாகங்களைக் கட்டாயம் கவாத்து செய்ய வேண்டும்.
அதேபோல் வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு எதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பைகளில் ஊற்ற வேண்டும். இது சிறந்த நோய் தடுப்பனாகவும் செயல்படும்.
அறுவடை :
இதற்கு இயற்கை உரங்களை மட்டும் அளித்து சரியாக பராமரித்தால் அதிகபட்சம் 10 முதல் 15 ஆண்டுகள் வரை பலன் தரக்கூடியது. காய்களை முற்றி விடாமம் சரியான பருவத்தில் இருநாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்ய வேண்டும்.
கோவைக்காயின் பயன்கள்
- இரத்ததில் இருக்கும் சர்க்கரையின் அளவை கோவைக்காய் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- கோவைக்காய் இலைகள் கண் பிரச்னைக்கும், கையில் ஏற்படும் சொறிக்கும், அரிப்புக்கும் மருந்தாகப் பயன்படுகிறது.
- கோவை இலையை அரைத்து உடலெங்கும் பூசி குளித்து வந்தால் வியர்குரு வராமல் தடுக்கலாம்.
- வயிற்றுப் பூச்சிகளைக் கட்டுபடுத்தும் ஆற்றல் இதற்கு உண்டு.
- கோவையிலை கசாயம் செய்து அருந்தி வந்தால் உடல் வெப்பம் சீராக இருக்கும். கண்கள் குளிர்ச்சி பெறும்.
வீட்டு தோட்டத்தில் கோவக்காய் பயிரிடும் முறையை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் இங்கே தெரிந்துகொள்ளுங்கள்
Leave a Reply