நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் சாம்பல் பூசணி பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.
- விதைகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
- பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்
.
தொட்டிகள்
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்பலாம். இந்த கலவை தயாரானதும் 10 நாட்கள் கழித்து விதைப்பு செய்ய வேண்டும். இது படரும் கொடி வகை என்பதால் 3 அடிக்கு மேலாக இருக்கும்படி தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
நல்ல தரமான ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். இது கொடி வகை என்பதால் ஒரு தொட்டியில் 3 முதல் 4 விதைகள் வரை ஊன்றலாம்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். இரு நாட்களுக்கு ஒருமுறை காலை அல்லது மாலை வேளையில் நீர் தெளிக்க வேண்டும்.
செடிகளுக்குத் தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்போது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை.
பந்தல் முறை
மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும். இதன் காய்கள் அதிக எடை கொண்டதால் அமைக்கும் பந்தல் உறுதியாக இருக்க வேண்டும். இதன் கொடிகளை சுவற்றின் மீதும் படர விடலாம்.
மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம். இது அதிக எடை கொண்ட காய்களை தாங்க வல்லது.
உரங்கள்
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக பக்கக்கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறுவதால் கீழுள்ள கழிவுகள் மேலும், மேலுள்ள கழிவுகள் கீழும் செல்வதால், கழிவை மக்கச் செய்யும் நுண்ணுயிர்களின் செயல்பாடு துரிதமாக இருக்கும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். 5 லிட்டர் தண்ணீரில் ஒரு கையளவு சாணத்தை கலந்தும் ஊற்றலாம். இதன் மூலம் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தப்படும்.
அறுவடை
இதில் 90 நாட்களில் அறுவடைக்கு வரும். காய்களை சரியான பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும்.
சாம்பல் பூசணி பயன்கள்:
- வைட்டமின் பி- 1 (தையமின்), வைட்டமின் பி- 3 (நியாசின்), வைட்டமின் – சி ஆகிய வைட்டமின்களையும், கால்சியம், பொட்டாசியம் ஆகிய தாதுக்களையும் கொண்டுள்ளது.
- அதிகளவில் உள்ள பொட்டாசியம் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்துக்கு உதவுகிறது.
- 96 சதவீத நீர்ச்சத்து கொண்ட சாம்பல் பூசணி உடல் எடை குறைப்புக்கு மிகவும் ஏற்ற உணவு. ஆயுர்வேதத்தில் உடல் ஆரோக்கியத்தை நிலைநிறுத்தும் டானிக்காக குறிப்பிடப்பட்டுள்ளது.
- வலிப்பு, மனநோய் போன்ற நரம்பு மற்றும் மூளை நோய்களையும் குணப்படுத்தும் மருந்தாகவும் பயன்படுகிறது.
- இது ஆஸ்துமா, சிறுநீரகக்கல் ஆகியவற்றைக் குணப்படுத்துவதிலும் உதவுகிறது.
Leave a Reply