நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் மல்லிகை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 50லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்.
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
- பதியன்கள் அல்லது வேர் விட்ட குச்சிகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
- கவாத்து உபகரணங்கள்
தொட்டிகள்
செடிகள் வளர்ப்பதற்காக டிரம்களில் நிரப்பும்போது, பையின் நீளத்தில் ஒரு அங்குலத்துக்குக் கீழ் இருக்குமாறு நிரப்ப வேண்டும், முழுமையாக நிரப்பக் கூடாது.
இதில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் என மூன்றையும் சம அளவில் கலந்து வைக்க வேண்டும்.
இது நீண்ட கால செடி என்பதால் தென்னை நார்க்கழிவு சேர்ப்பது சிறந்தது. அப்பொழுது தான் மண் இலகுவாக செடி வளர்வதற்கு ஏற்றதாக இருக்கும்.
விதைத்தல்
பதியன்களை மையத்தில் நடவு செய்ய வேண்டும். வேர்ப்பகுதி முழுவதும் மறையும் படி நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் ஒருநாள் விட்டு ஒருநாள் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும்.
தென்னை நார்க்கழிவு இருப்பதால் ஈரப்பத்தை கண்காணித்து நீர் ஊற்ற வேண்டும்.
உரங்கள்
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
பாதுகாப்பு முறைகள்
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட்டு நீர் ஊற்ற வேண்டும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும்.
செடிகளின் கிளைகளை கவாத்து செய்ய வேண்டும். அப்பொழுது தான் பக்கக்கிளைகள் தோன்றும்.
பயன்படுத்தும் இடங்கள்
இதன் தொட்டியை சுவற்றின் அருகில் சிறு கற்களை இட்டு அதன் மீது வைக்க வேண்டும். அப்பொழுது தான் செடிகளை சுவற்றின் மீது படர விட ஏதுவாக இருக்கும்.
இதன் வாசனையை விரும்பாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இதன் வாசனையை நுகரும் பொழுது மனதிற்கு ஒரு வித உற்சாகம் கிடைக்கும்.
தொட்டியை ஜன்னல் அருகில் வைப்பதால் இதன் வாசனை நாள் முழுவதும் வீட்டில் பரவி இருக்கும்.
மல்லிகை பயன்கள்:
- 4 மல்லிகைப் பூவை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வந்தால் வயிற்றில் உள்ள கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழியும்.
- மல்லிகைப் பூக்களை நிழலில் வைத்து உலர்த்தி அவை காகிதம் போல ஆனதும், அவற்றை பொடியாக அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனை தண்ணீரில் கலந்து குடித்து வர சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து போகும். எந்த உயர் சிகிச்சையும் தேவைப்படாது.
- அடிபட்டு அல்லது சுளுக்குப் பிடித்து வீக்கம் காணப்பட்டாலும், நாள்பட்ட வீக்கமாக இருந்தாலும், மல்லிகைப் பூவை அரைத்துப் பூசினால் வீக்கம் குறையும்.
- நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
- மன அழுத்தம், உடல் சூடு போன்ற பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள், ஒன்றுமே செய்ய வேண்டாம். பிடித்த அளவிற்கு மல்லிகைப் பூவை வாங்கி தலையில் சூடினால் போதும். மன அழுத்தமும் குறையும், உடல் சூடும் மாறும்.
Leave a Reply