நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் மாதுளைப்பழம் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- அகன்ற தொட்டி
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- வேர்விட்ட குச்சிகள்
- போன்சாய் உபகரணங்கள்
தொட்டிகள்
சாதாரண மாடித்தோட்டம் : இதன் தொட்டிகளை சிறு கற்களை நிரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.
அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு தென்னை நார்க்கழிவு, ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
போன்சாய்: மரங்கள் வளர்ப்பதற்கு மண்ணால் செய்யப்பட்ட தொட்டிகளில் உயரம் குறைவான அலரங்கார வேலைப்பாடுகளுடன் கூடிய தொட்டிகளைப் பயன்படுத்தலாம். பெரும்பாலும் வட்ட வடிவங்களில் உள்ள தொட்டிகளை விட நீள்வட்டம், செவ்வகம் போன்ற மற்ற வடிவ தொட்டிகள் இன்னும் சிறப்பாக இருக்கும்.
செம்மண் மற்றும் மணலுடன் குறைந்த அளவு எரு உரம் கிடைத்தால் போதுமானது. மிகவும் மெதுவாக உரங்கள் செடியின் வளர்ச்சிக்குக் கிடைப்பதால் செடி மிக வேகமாக வளருவதைக் கட்டுப்படுத்தலாம்.
விதைத்தல்
சாதாரண மாடித்தோட்டம் : தொட்டிகளின் மையத்தில் நடவு செய்ய வேண்டும்.
போன்சாய் : செடிகளை தொட்டியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். செம்பு, அலுமினிய கம்பிகளை கிளைகள் மீது சுற்ற வேண்டும். இதன் மூலம் அதன் வளர்ச்சியை தடுக்கலாம். 6 முதல் 8 மாதங்கள் வரை இக்கம்பிகளை நீக்கக் கூடாது. அதன்பின் கம்பிகளை நீக்கும் பொழுது கம்பிகளின் வடிவத்திற்கேற்ப கிளைகள் வளைந்து காணப்படும்.
நீர் நிர்வாகம்
சாதாரண மாடித்தோட்டம் : கன்றுகளை நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தண்ணீர் தேவைப்படுகிறதா என்பதை ஒரு குச்சியை எடுத்து ஊடகத்தினுள் செருகிப் பார்க்க வேண்டும். அப்பொழுது குச்சியில் துகள்கள் ஒட்டிக்கொண்டால் தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் தென்னை நார்க்கழிவு ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் தன்மை கொண்டது.
போன்சாய் : இதற்கு தண்ணீர் அதிகளவில் ஊற்ற கூடாது. அவ்வப்பொழுது தண்ணீர் தெளிக்க வேண்டும்.
உரங்கள்
சாதாரண மாடித்தோட்டம் : சமையலறை கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
போன்சாய் : இதற்கு உரங்கள் எதுவும் இடத் தேவையில்லை. தொட்டியில் நிரப்பும் அடியுரங்களே ஒரு வருடம் வரை போதுமானது.
பாதுகாப்பு முறைகள்
சாதாரண மாடித்தோட்டம் : பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூள், வேப்பங்கொட்டை தூள் ஆகியவற்றை தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும் பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
நுனி கிளைகளை நீக்கி கவாத்து செய்ய வேண்டும். இதன் மூலம் அதிக பக்கக்கிளைகள் தோன்றும். நான்கு ஆரோக்கியமான கிளைகளை வளர அனுமதிக்க வேண்டும்.
போன்சாய் : ஆண்டுக்கு ஒருமுறை தொட்டியிலிருந்து செடியினைத் தனியாக வெளியில் எடுக்க வேண்டும். அப்பொழுது வேறு உரத்தினை நிரப்ப வேண்டும். செடியில் வளர்ந்துள்ள அதிகப்படியான வேர்களை அகற்ற வேண்டும். ஆணி வேரின் வளர்ச்சியை குறைத்து, பக்க வேர்களின் வளர்ச்சியைத் தூண்டி விடவேண்டும். அதிகமாக வளர்ந்து தொட்டியின் ஓரங்கள் வரை சென்று சுருண்டு உள்ள அனைத்து வேர்களையும் வெட்டி விடலாம். அதன் மூலம் அதிகமாக வளர்ந்து வேர்களே தொட்டியை உடைத்துவிடும் அபாயத்தைத் தவிர்க்கலாம். மேலும் வேர்கள் குறைவதால் செடியின் வளர்ச்சியும் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.
அதேபோல ஆண்டிற்கு ஒரு முறை நீண்டு வளரும் கிளைகளையும், இலைகளையும் தண்டுப்பகுதியில் வெட்டி விட வேண்டும். மரத்தின் அமைப்பு தெரியும் அளவிற்கு மட்டும் கிளைகளைப் பராமரிக்க வேண்டும். தினமும் 4 முதல் 6 மணி நேரம் வரை சூரிய ஒளி மரங்கள் மீது விழுமாறு வைக்க வேண்டும்.
அறுவடை
சாதாரண மாடித்தோட்டம் : நன்கு திரண்ட காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
போன்சாய் : நன்றாக பராமரிக்கப்பட்ட போன்சாய் மரங்களை வீட்டின் வரவேற்பறையிலோ அல்லது வீட்டின் முன்புறம் உள்ள தோட்டப் பகுதிகளிலோ வரிசையாக வைத்து அலங்கரிக்கலாம். தொட்டிகளின் வண்ணமும் நன்கு எடுப்பாகத் தெரியும் வகையில் இருந்தால் மிகவும் அழகாக இருக்கும்.
மாதுளையின் பயன்கள்:
- மாதுளம் பழத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமுள்ளதால் சிறந்த நோய் தடுப்பானாக செயல்படும். எனவே காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் மாதுளம் பழ ஜூஸ் அருகும்பொழுது அதிக அளவு ஆற்றல் கிடைக்கும். மாதுளை வைரஸ் கிருமிகளை உடனடியாக அழித்து உடலுக்கு புத்துணர்ச்சியை அளிக்க வல்லது.
- குடல் புண் மற்றும் வயிற்று புண்களை குணமாக்கும் சக்தி மாதுளை பழத்திற்கு உண்டு.
- புதிய ரத்தத்தை உற்பத்திசெய்யும் திறன் மாதுளை பழத்திற்கு உண்டு. எனவே ரத்த சோகை உள்ளவர்கள் அதிக அளவு மாதுளை பழம் சாப்பிடும்பொழுது உடலில் அதிக அளவு ரத்தம் சுரக்கும்.
- ஒரு ஸ்பூன் மாதுளை ஜூஸ் மற்றும் ஒரு ஸ்பூன் சந்தானம் இரண்டையும் கலந்து முகத்தில் பூசி பாத்து நிமிடம் களைத்து கழுவினால் முகம் பளபளப்பாக மாறும்.
Leave a Reply