நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் முலாம்பழம் பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti.
- அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு, மண்புழு உரம், செம்மண், வேப்பந்தூள், பஞ்சகாவ்யா.
- விதைகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
- பந்தல் போடுவதற்கான உபகரணங்கள்
தொட்டிகள்
தேங்காய் நார் கழிவு இரண்டு பங்கு, மாட்டுச்சாணம் ஒரு பங்கு, சமையலறை கழிவு ஒரு பங்கு என இயற்கை உரங்களை கொண்டு தொட்டியை நிரப்பி ஆற விட வேண்டும்.
இது கொடி வகை என்பதால் மூன்று அடிக்கு மேல் இருக்குமாறு தொட்டிகளில் மண் மற்றும் உரக்கலவையை நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
நல்ல தரமான ஆரோக்கியமான விதைகளை தேர்ந்தெடுத்து விதைக்க வேண்டும். ஒரு குழிக்கு 3 விதைகள் வரை ஊன்றலாம்.
நீர் நிர்வாகம்
விதைகளை விதைத்தவுடன் பூவாளியால் நீர் தெளிக்க வேண்டும். தினம் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
பந்தல் முறை
மாடியில் பந்தல் போடுவது எளிமையான ஒன்று ஆகும். அதற்கு நான்கு சாக்கில் மணலை நிரப்பி ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மூங்கில் கம்பை ஆழமாக ஊன்றி மூலைக்கு ஒன்றாக நான்கு சாக்குகளையும் நான்கு மூலைகளில் வைக்க வேண்டும். அடியில் சிறு கற்களை கொண்டு மேடை போல் அமைத்து அதன்மீது சாக்கு பைகளை வைப்பது சிறந்தது. பின்னர் இதில் கயிறு அல்லது கம்பிகளை குறுக்கு நெடுக்காக கட்ட வேண்டும். இந்த பந்தலில் கொடிகளை படர விட வேண்டும்.
மாடியில் கம்பிகள் இருந்தால் அவற்றை பயன்படுத்தியும் பந்தல் போடலாம். இலையெனில் சுவற்றின் மீதும், தரையிலும் கூட படர விடலாம்.
உரங்கள்
வீட்டு சமையலறை கழிவுகளை ஒரு குழியில் கொட்டி மக்கச்செய்து அதனை உரமாக பயன்படுத்தலாம்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும்.
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு கிளறிவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
பாதுகாப்பு முறைகள்
வளரும் நுனி கிளைகளை கவாத்து செய்வதால் அதிக கிளைகள் தோன்றுவதற்கு ஏதுவாக இருக்கும். 15 நாட்களுக்கு ஒருமுறை கழிவுகளைக் கிளறி விட வேண்டும்.
பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் சமயத்தில் பைகளில் ஊற்ற வேண்டும். இதனால் பூக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இது சிறந்த நோய் தடுப்பானாகவும் செயல்படும்.
அறுவடை
காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது காய்களை அறுவடை செய்ய வேண்டும்.
முலாம்பழம் பயன்கள்:
- இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், தேகத்துக்கு உறுதியையும் சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.
- இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மை இதற்கு உண்டு.
- வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல் பாதுகாக்கிறது.
- சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லடிக்கும். அவர்கள் முலாம்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
- இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
- சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்னை இருக்கும். அதற்கு இந்தப் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் உண்டு வந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும்.
Leave a Reply