நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வல்லாரைகீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- Grow Bags அல்லது Thotti
- அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா , வேப்பந்தூள்.
- வேர்கள்
- பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக மண், இயற்கை உரம், தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை சம அளவு கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
பைகளில் உரங்களை நிரப்பும் பொழுது, ஒரு அடி ஆழத்திற்கு மேல் நிரப்ப வேண்டும்.
விதைத்தல்
வேர்களை தொட்டியின் அளவைப் பொறுத்து குறிப்பிட்ட இடைவெளியில் ஊன்ற வேண்டும். அதன் வேர் பகுதிகள் அல்லது கணுக்கள் முழுவதும் மறையும் படி ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
வேர்களை ஊன்றியவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருப்பதால் ஈரப்பதத்தைக் கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும் தன்மை கொண்டது.
பைகளை உபயோகப்படுத்தினால் அதன் அடியில் இரு துளைகளை இட வேண்டும். ஏனெனில் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் துளை வழியே வெளியேறி விடும்.
உரங்கள்
சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
தண்ணீருடன் பஞ்சகாவ்யாவை கலந்து ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
பூச்சிகளின் தாக்குதல் காணப்பட்டால் அதனை சமாளிக்க நொச்சி, பிரண்டை, சோற்றுக்கற்றாழை ஆகிய மூன்றையும் சமமாக எடுத்து அரைத்து, ஒரு லிட்டர் மாட்டுச் சிறுநீரில் கலந்து ஒரு நாள் வைத்திருக்க வேண்டும். பின் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி கரைசல் என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும்.
அறுவடை
வளரும் கிளைகளிலிருந்து வெளிப்புற இலைகளை அறுவடை செய்ய வேண்டும். அப்பொழுது தான் வேரில் இருந்து மறுபடியும் தழைத்து வர ஏதுவாக இருக்கும்.
பயன்கள்:
- இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்சத்து A, C மற்றும் தாதுஉப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன.
- வல்லாரை கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், ஞாபக சக்தி அதிகரிப்பதுடன், மூளை நரம்புகள் வலுப்பெறும்.
- வீக்கம், கட்டிகள் மறைய வல்லாரை இலையை விளக்கெண்ணெயில் வதக்கி வீக்கம், கட்டி ஆகியவற்றின் மீது கட்டிவர விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.
- வல்லாரை இலையை வாயில் போட்டு மென்று விழுங்கினால் குடல் புண், குடல் நோய், வாய்ப்புண், வாய் நாற்றம் ஆகியவை அகலும்.
- இக்கீரையானது தொண்டைக்கட்டுதல், காய்ச்சல் மற்றும் சளி ஆகியவற்றை குணப்படுத்த உதவுகிறது.
- உடற்சோர்வு, பல்நோய்கள் மற்றும் படை போன்ற தோல் நோய்களை வேரறுக்கும் வல்லமைக் கொண்டது இந்த வல்லாரை.
Leave a Reply