நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் வெந்தயக்கீரை பயிரிடும் முறை யை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 1. Grow Bags அல்லது Thotti
- 2. அடியுரமாக இட மணல், தென்னை நார்க்கழிவு, மண்புழு உரம், செம்மண், பஞ்சகாவ்யா.
- 3. விதைகள்
- 4. பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
தேர்வு செய்த தொட்டி அல்லது பைகளில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் ஆகியவற்றை கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும்.
கீரைகள் வளர்ப்பதற்காக பைகளில் நிரப்பும்போது, அரை அடி ஆழத்திற்கு மேல் நிரப்பினால் போதுமானது.
விதைத்தல்
விதைகளை மணல் கொண்டு கலந்து பைகளில் தூவி கிளறி விட வேண்டும். விதைகள் அளவில் சிறியதாக இருப்பதால் மணல் கொண்டு விதைத்தால் சீராக விழும். பின்னர் அதில் நிரப்பியுள்ள கலவையை கொண்டு மெல்லிய போர்வை போல் அமைக்க வேண்டும். விதைகளின் மீது செய்திதாள்களை கொண்டு மூடி விட வேண்டும். விதைகள் முளைத்தவுடன் செய்திதாள்களை நீக்கி விடலாம்.
நீர் நிர்வாகம்
விதைத்தவுடன் பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
தென்னை நார்க்கழிவுகளை அடியுரமாக போட்டிருந்தால் ஈரப்பதத்தை கண்காணித்து தண்ணீர் ஊற்ற வேண்டும். ஏனெனில் அது அதிக ஈரப்பதத்தை தக்க வைத்துக்கொள்ளும். ஈரப்பதம் அதிகமாக இருந்தால் பூஞ்சாண நோய்கள் உருவாக வாய்ப்புள்ளது.
உரங்கள்
சமையலறைக் கழிவுகளை மக்கச்செய்து உரமாக போடலாம். மண்புழு உரத்தை அடியுரமாக இடுவதால் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.
பஞ்சகாவ்யா 10 மில்லியை, இரண்டு லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
அதிகளவு வெய்யில் படுவதால் கீரைகள் வாடி விடும். இதை ஈடுகட்ட கீரை வளர்க்கும் பகுதியைச் சுற்றிலும் வலை அமைக்கலாம். இல்லையெனில் சிறிது நிழல் விழும் இடத்தில் மாற்றி வைக்கலாம்.
இலைகளில் பூச்சி தாக்குதல் காணப்பட்டால் வேப்பந்தூளை தண்ணீரில் கலந்து வேர்ப் பகுதியில் ஊற்ற வேண்டும். இது சிறந்த பூச்சி விரட்டியாக செயல்படும்.
அறுவடை
கீரைகளை முற்றி விடாமல் இளம் தளிராக இருக்கும் போது அறுவடை செய்ய வேண்டும். பொதுவாக 25 முதல் 30 நாட்களில் அறுவடை செய்யலாம்.
பயன்கள்:
- வெந்தயக் கீரைகள் இரும்புச்சத்துப் பொருட்களை அதிக அளவில் கொண்டு உள்ளன. இரும்புச்சத்துப் பொருட்கள் உடலில் ஏற்படும் ரத்தசோகை வராமல் தடுப்பதோடு, உடலுக்கு சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
- வெந்தயக் கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கி, இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு, ஒரு டம்ளர் அளவிற்குச் காய்ச்சி, காலை மாலை அரை டம்ளர் வீதம் உண்டு வந்தால் நெஞ்சுவலி பூரணமாகக் குணமாகும்.
- பத்து கிராம் வெந்தயத்தை நெய்யில் வறுத்துச் சிறிதளவு சோம்பு, உப்பு சேர்த்து அரைத்து மோரில் கரைத்துக் சாப்பிட வயிற்றுப் போக்கு தீரும்.
- வெந்தயக் கீரைகளை தினசரி உணவில் சேர்ப்பது உடலில் ஏற்படும் புரதக்குறைபாட்டை போக்கி வலிமை சேர்க்கும்.
- வெந்தயக்கீரையில் ஏ வைட்டமின் சக்தியும், சுண்ணாம்புச்சத்தும் இருப்பதால் இதை சாப்பிடும் போது மாரடைப்பு, கண்பார்வை குறைபாடு, வாதம், சொறி சிரங்கு, இரத்தசோகை ஆகியவை குணமடையும்.
- கீரையில் உள்ள புரதப்பொருட்களான சாப்போனின், மியூக்கலேஜ் போன்றவை பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
Leave a Reply