நாம் அனைவரும் அன்றாட காய்கறிகளை நமது வீட்டு மாடியில் பயிர் செய்யலாம். இவ்வாறு பயிர் செய்வதினால் நமக்கு உடல் நலத்தை காப்பதுடன் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகளை உண்ட திருப்தியும் ஏற்படும். எனவே நம்மால் முடிந்த அளவுக்கு மாடித்தோட்டங்களை ஏற்படுத்தலாம். மாடித்தோட்டத்தில் நெல்லிக்காய் பயிரிடும் முறையை இங்கு காணலாம்.
தேவையான பொருட்கள்
- 75 லிட்டர் முதல் 100 லிட்டர் கொள்ளளவு கொண்ட டிரம்
- அடியுரமாக இட மணல், தென்னை நார் கழிவு மக்கியது, மண்புழு உரம், செம்மண், வேப்பம் பிண்ணாக்கு, பஞ்சகாவ்யா.
- நடுவதற்கு ஏற்ற ஒட்டு செடிகள்
- நீர் தெளிக்க உதவும் பூவாளி தெளிப்பான்
தொட்டிகள்
இதற்கு டிரம்களில் அடியுரமாக ஒரு பங்கு மண், ஒரு பங்கு மணல், ஒரு பங்கு இயற்கை உரம் மற்றும் தென்னை நார்க்கழிவு ஆகியவற்றை கலந்து வைக்க வேண்டும். தென்னை நார்க்கழிவு சேர்ப்பதால் மண் இறுக்கமாகாமல் இலகுவாக இருக்கும். இதன் மூலம் வேர்கள் நன்கு வளரும். தயார் செய்துள்ள டிரம்களில் 10 நாட்களுக்கு பிறகு செடிகளை நடவு செய்ய வேண்டும்.
விதைத்தல்
நெல்லியை நடுவதற்கு ஒட்டுச் செடிகளை பயன்படுத்த வேண்டும். செடிகளை தொட்டியின் நடுப்பகுதியில் வைத்து நடவு செய்ய வேண்டும்.
நீர் நிர்வாகம்
நட்டவுடன் நீர் தெளிக்க வேண்டும். பின்னர் தினமும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்ற வேண்டும். பயன்படுத்தும் டிரம்மின் அடிப்பகுதியில் இரு துளைகளை இட வேண்டும். இதனால் அதிகப்படியான தண்ணீர் இருந்தால் வெளியேறி விடும். இல்லை எனில் தண்ணீர் அதிகமாக இருந்தால் வேர்கள் அழுகி விட வாய்ப்புள்ளது.
உரங்கள்
வேப்ப இலைகளைச் சேமித்து நன்கு காய வைத்துத் தூள் செய்துகொள்ள வேண்டும். இந்தத் தூளைச் செடி ஒன்றுக்கு ஒரு பிடி வீதம் செடியின் வேர் பகுதியில் போட்டு நன்கு கொத்திவிட வேண்டும். இதுவே அடி உரமாகவும், பூச்சிக் கொல்லியாகவும் செயல்படும்.
ஒரு கையளவு சாணத்தை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து வாரம் ஒரு முறை ஊற்ற வேண்டும். சாணம் அதிகமாக இருந்தால் எறும்புகள் வர வாய்ப்புள்ளது. குறைந்தளவு சாணத்தை தான் பயன்படுத்த வேண்டும்.
செடிகளைக் காக்கும் இயற்கை பூச்சிக் கொல்லியான வேப்ப எண்ணையை மாதம் ஒரு முறை தெளிக்க வேண்டும். சமையலறை கழிவுகளையும் உரமாக இடலாம்.
பாதுகாப்பு முறைகள்
பூச்சிகளை கட்டுப்படுத்த பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி ஆகியவற்றை அரைத்து ஊறவைத்து வடிகட்டி தெளிக்க வேண்டும்.
நுனிகளை கிள்ளி விட்டு பக்கக்கிளைகளை வளரவிட வேண்டும். மூன்று கிளைகளுக்கு மேல் வளர அனுமதிக்க கூடாது.
வாரம் ஒரு முறையாவது செடியைச் சுற்றி அடி மண்ணைக் கொத்தி விட வேண்டும். பஞ்சகாவ்யா 50 மில்லி என்ற அளவில் ஒரு லிட்டர் நீரில் கரைத்து வேர் பகுதியில் ஊற்ற வேண்டும்.
அறுவடை
இது நன்கு வளரும் தன்மை கொண்டது. இதை மாடியின் ஒரு மூலைப்பகுதியில் வைப்பது நல்லது. அறுவடைக்கு சுலபமாக இருக்கும். நன்கு திரண்ட காய்களை பறிக்க வேண்டும்.
நெல்லிக்காய் பயன்கள்:
- தோல் வியாதிகளை குணப்படுத்தும் மூலிகை மருந்துகளில் நெல்லிக்கனியின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது. இது ரத்த சுத்திகரிப்பிற்கு பெரிதும் உதவுகிறது. அதனால், பருக்கள், கொப்புளங்கள் போன்றவை வராமல் தடுக்கிறது.
- சளியை வெளியேற்றி, சுவாசமண்டலத்தை சீராக இயக்குகிறது. நீண்ட நாள் இருந்து வரும் இருமல், ஆஸ்துமா, எலும்புருக்கி நோய் போன்ற நோய்களுக்கு அருமருந்தாக உதவுகிறது.
- பக்கவாதம், நரம்புத்தளர்ச்சி போன்ற நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கிறது. மூளை பலம்பெறவும், ஐம்புலன்கள் சீராக இயங்கவும் உறுதுணை புரிகிறது. மனஇறுக்கத்தைப் போக்கி, நுண்ணறிவுடன் செயல்பட வழிவகுக்கிறது.
- காய்ச்சல் உண்டாகாதவாறு தடுக்கிறது. காயங்கள், வீக்கம் போன்றவற்றால் உண்டாகும் வலிகளைப்போக்கி, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- கண் பார்வைத்திறனை அதிகரிக்கிறது. கண்எரிச்சல், கண்ணில் நீர் வடிதல், கண் சிவத்தல் போன்ற கண் சம்பந்தமான குறைபாடுகளை போக்குகிறது.
- ரத்தத்தில் உள்ள குளுக்கோசின் அளவைக் கட்டுப்படுத்தி சர்க்கரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. உடலுக்கு நோய் எதிர்ப்பாற்றலை தந்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Prabu says
Really nice sir .. I appreciate
Navinkumar V says
நன்றி. தொடர்ந்து எனக்கு ஆதரவு தாருங்கள்..