முலாம்பழம் கோடைகாலத்தில் அதிகமாகக் கிடைக்கக் கூடிய பழவகைகளுள் முக்கியமானது.
முலாம்பழத்தின் தாயகம் இந்தியா ஆகும். இதனை கிர்ணிப் பழம் என்றும் அழைப்பர்.
ஆனால் இதனை நம் நாட்டில் பயன்படுத்துவது குறைந்துள்ளது.
சீனா, இப்பழ உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள்
அர்கா ராஜ்கான்ஸ், அர்கா ஜீட், பூசா சர்பதி, பூசா மதுரகஸ், பஞ்சாப் சன், துர்காபுரா மாது மற்றும் பஞ்சாப் ரசிலாஹெரி ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்றவை.
பருவம்
டிசம்பர் முதல் ஜனவரி மாதங்களில் விதை விதைத்தால் கோடை காலத்திற்கு நல்ல விளைச்சலைக் கொடுக்கும். மானாவாரிப் பயிராக ஜூன் மாதத்திலும் விதைக்கலாம்.
மண்
செம்மண், மணல் கலந்த செம்மண், மணல் சாரியான மண் வகைகள் ஏற்றவை. மண்ணின் கார அமிலத்தன்மை 6.5 முதல் 7.5 வரையில் இருக்க வேண்டும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை 3-4 முறை உழுது எக்டருக்கு 50 டன் மக்கிய தொழு உரத்தை இட்டு நிலத்தை பண்படுத்த வேண்டும். பின் 2 அடி (60 செ.மீ) அகலத்திற்கு நீளமான வாய்க்கால்களை 2 மீட்டர் இடைவெளியில் எடுக்க வேண்டும். வாய்க்கால்களின் பக்கவாட்டில் 45 x 45 x 45 செ.மீ அளவுள்ள குழிகளை ஒரு மீட்டர் இடைவெளியில் தோண்டி மண்புழு அல்லது கலப்பு உரங்களைப் போட்டு, மண்ணுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
விதையளவு
ஒரு எக்டருக்கு 3 கிலோ விதைகள் வீதம் தேவைப்படும்.
விதைநேர்த்தி
விதையை 4.0 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது 10 கிராம் சூடோமோனஸ் ப்ளோரசன்ஸ் அல்லது கார்பன்டிசம் எக்டருக்கு 2 கிராம் கொண்டு விதைநேர்த்தி செய்ய வேண்டும்.
விதைத்தல்
விதை நேர்த்தி செய்த விதைகளை குழிகளின் மத்தியில் மூன்று அல்லது நான்கு விதைகள் வீதம் 0.6 மீ இடைவெளியில் ஊன்ற வேண்டும்.
நீர் நிர்வாகம்
விதை விதைப்பதற்கு முன் நீர்ப் பாய்ச்ச வேண்டும். மூன்றாம் நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். பின்னர் வாரத்திற்கு ஒரு முறை நீர் பாய்ச்ச வேண்டும்.
உரங்கள்
55 கிலோ மணிச்சத்து, 55 கிலோ சாம்பல்சத்து கொடுக்கக்கூடிய உரங்களை அடியுரமாக இடவேண்டும். எக்டருக்கு தழை, மணி மற்றும் சாம்பல் சத்துக்கள் முறையே 200:100:100 கிலோ பயிர் காலம் முழுவதும் பகிர்ந்து அளிக்க வேண்டும்.
ஊட்டத்துக்கு ஜீவாமிர்தம் !! பூச்சிகளுக்குப் பூச்சிவிரட்டி!
பூச்சித்தாக்குதல் 8-ம் நாளில் இருந்து தென்பட ஆரம்பிக்கும். அப்போது ஒரு டேங்க் தண்ணீருக்கு (10 லிட்டர்) 100 மில்லி மீன் அமிலம், 100 மில்லி மூலிகைப் பூச்சிவிரட்டி ஆகியவற்றைக் கலந்து ஏக்கருக்கு 5 டேங்குகள் வீதம் தெளிக்க வேண்டும். 10-ம் நாள் முதல் வாரம் ஒரு முறை 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலை பாசன நீரில் கலந்து விட வேண்டும். தலா 10 கிலோ வீதம் கடலைப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு, பருத்திப் பிண்ணாக்கு, தேங்காய்ப் பிண்ணாக்கு ஆகியவற்றை 200 லிட்டர் தண்ணீரில் நான்கு நாட்கள் ஊற வைத்துக்கொள்ள வேண்டும். 15-ம் நாளில் இந்தக் கரைசலை ஒவ்வொரு செடிக்கும் 100 மில்லி வீதம் ஊற்ற வேண்டும்.
15 முதல் 20-ம் நாட்களுக்குள் தலா ஒரு கிலோ இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் எடுத்து இடித்து, 10 லிட்டர் தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைத்து, ஒரு டேங்க் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வீதம் கலந்து தெளிக்க வேண்டும். இது பூச்சித்தாக்குதலைக் கட்டுப்படுத்தும்.
வளர்ச்சி ஊக்கிகள்
10 லிட்டர் தண்ணீரில் 2.5 கிராம் எத்ரல் வளர்ச்சி ஊக்கியை நன்கு கலக்கி விதைத்த 15 நாட்கள் கழித்தும், பின் வாரம் ஒரு முறை என 4 வாரங்களுக்கு செடியின் மீது தெளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
விதை விதைத்ததில் இருந்து 30 நாட்கள் கழித்து களை எடுக்க வேண்டும். பொதுவாக 3 முறை களை எடுக்க வேண்டும். விதைகளை விதைத்து 15 நாட்கள் கழித்து குழிக்கு 2 நாற்றுக்களை மட்டும் விட்டு மீதியை நீக்கிவிட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
இலை வண்டுகள்
இலை வண்டுகளைக் கட்டுப்படுத்த ஒரு லிட்டர் தண்ணீரில் 1 மி.லி மாலத்தியான் அல்லது 2 கிராம் கார்பர் கலந்து வாரத்திற்கு ஒரு முறை தெளிக்க வேண்டும்.
வெள்ளை ஈக்கள்
வெள்ளை ஈக்களை கட்டுப்படுத்த வேப்பங்கொட்டைக் கரைசல் 5 சதவிகிதம் தெளிக்க வேண்டும்.
காய்ப்புழுக்கள்
காய்ப்புழுக்களைக் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட காய்களைப் பறித்து அழிக்க வேண்டும். நிலத்தை நன்கு உழுது கூட்டுப்புழுக்களை சூரிய ஒளியில் நன்கு படுமாறு செய்து அவற்றை அழிக்க வேண்டும்.
அறுவடை
காய்களின் மேற்பரப்பிலுள்ள வலைகளுக்கு இடைப்பட்ட பகுதி மஞ்சள் நிறமாகவும், வலைகள் மங்கலான வெள்ளை நிறமாகவும் மாறும்போது அறுவடை செய்ய வேண்டும்.
மகசூல்
ஒரு எக்டருக்கு 20-25 டன் பழங்கள் வரை கிடைக்கும்.
பயன்கள்
- இதில் புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகம் இருப்பதால், தேகத்துக்கு உறுதியையும் சருமத்திற்கு பொலிவையும் கொடுக்கிறது.
- இதில் வைட்டமின்கள் ஏ, பி, சி போன்ற தாதுப்பொருட்கள் இருப்பதால் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கின்றது. கல்லீரல் கோளாறுகளைப் போக்கும் தன்மை இதற்கு உண்டு.
- வைட்டமின் சி சத்து அதிகம் உள்ளதால் இதய நோய், புற்று நோய் வராமல் பாதுகாக்கிறது. மிக முக்கியமாக Stroke எனப்படும் பக்கவாதத்தை வராமல் பாதுகாக்கிறது.
- சிலருக்கு முகத்தில் அடிக்கடி வியர்த்துக் கொட்டி முகம் டல்லடிக்கும். அவர்கள் முலாம்பழத் துண்டு ஒன்றைக் கைகளால் மசித்து, முகத்தில் பூசி கழுவினால் முகம் பளிச்சென்று இருக்கும்.
- இப்பழச் சதையுடன் தேன் கலந்து உண்டு வர, வாய்ப்புண், தொண்டைப் புண் குணமாகும். கண் பார்வையை அதிகரிக்கும் சக்தி இதற்கு உண்டு.
- சரியான உணவுப்பழக்கமின்மை, அதிகம் மருந்துகள் எடுத்துக்கொள்ளுதல் ஆகியவற்றால் வயிற்றுப்புண் எனப்படும் அல்சர் பிரச்னை இருக்கும். அதற்கு இந்தப் பழத்தைத் தொடர்ந்து சில நாட்கள் உண்டு வந்தால், வயிற்றுப் புண் பூரண குணமடையும்.
கண்ணன், மதுரை says
மாடி தோட்டத்தில் வளர்க்க முடியுமா நவீன் சார்