முந்திரி அல்லது மரமுந்திரி என்பது அனகார்டிசியே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மரம் ஆகும்.
இம்மரமானது தென் அமெரிக்காவின் வடக்குப் பகுதியை பூர்வீகமாகக் கொண்டது. பின்னர் 1560- 1565ம் ஆண்டில் போர்த்துக்கீசியரால் இந்தியாவில் உள்ள கோவாவிற்கு எடுத்து வரப்பட்டு, பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவை அடைந்தது.
முந்திரியில், முந்திரிப்பழம் என அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் என அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப் பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள தடித்த பூக்காம்புப் பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இது முந்திரி ஆப்பிள் எனவும் அழைக்கப்படுகிறது.
முந்திரியில், முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் உள்ள அமைப்பே உண்மையான பழம் ஆகும். இது உண்மையான பழமாக இருந்தாலும், இதன் உள்ளே இருக்கும் உண்ணக்கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.
இம்மரமானது இன்று வெப்பமண்டல நாடுகள் பலவற்றில் வளர்க்கப்படுகிறது. வியட்நாம், நைஜீரியா, இந்தியா, பிரேசில், இந்தோனீசியா ஆகிய நாடுகளில் இது அதிகம் பயிரிடப்படுகிறது.
எப்படி பயிரிடுவது…?
இரகங்கள் :
வி.ஆர்.ஐ.1 (விருத்தாச்சலம்) வி.ஆர்.ஐ.2, வி.ஆர்.ஐ 3, வி.ஆர்.ஐ 4, வி.ஆர்.ஐ (CW) ஹெச் 1, வென்குர்லா 4, வென்குர்லா 7, பப்பட்லால் – 8 ஆகிய இரகங்கள் சாகுபடிக்கு ஏற்ற இரகங்கள் ஆகும்.
பருவம்
ஜுன் – டிசம்பர் மாதங்களில் நடவு செய்ய ஏற்ற பருவம் ஆகும்.
மண்
நல்ல வடிகால் வசதி கொண்ட செம்மண் பாங்கான நிலத்தில் நன்கு வளரும் தன்மை கொண்டது. இது வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. மழை அளவு 50 முதல் 250 செ.மீ வரை உள்ள இடங்களிலும் நன்கு வளரும்.
நிலம் தயாரித்தல்
நிலத்தை இரண்டு அல்லது மூன்று முறை நன்கு உழுது, கட்டிகள் இல்லாமல் பண்படுத்த வேண்டும். பின் 45 செ.மீ நீளம், அகலம், ஆழம் உள்ள குழிகளை எடுக்க வேண்டும். ஒவ்வொரு குழிகளுக்கும் இடையே உள்ள இடைவெளி 7 மீட்டர் இருக்குமாறு அமைத்துக் கொள்ளவேண்டும். ஒவ்வொரு குழியிலும் மேல் மண்ணுடன் 2 கிலோ தொழு உரம், ஒரு கிலோ வேப்பம் புண்ணாக்கு இடவேண்டும்.
விதையளவு
ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. ஒரு ஏக்கரில் நடவு செய்வதற்கு 200 கன்றுகள் தேவைப்படும்.
விதைத்தல்
தயார் செய்துள்ள குழிகளில் கன்றுகளை குழியின் மையப்பகுதியில் நடவு செய்ய வேண்டும். அடர் நடவு முறையில் 5 x 4 மீ இடைவெளியில் ஒரு ஏக்கருக்கு 500 மரங்கள் வீதம் நடவு செய்யலாம்.
நீர் நிர்வாகம்
செடிகள் ஓரளவுக்கு வளர்ந்து வரும் வரை தண்ணீர் ஊற்றிப் பராமரிக்க வேண்டும். பூக்கும் தருணத்திலும், காய் பிடிக்கும் தருணத்திலும் வறட்சியான சீதோஷ்ண நிலை நிலவினால் காய் பிடிப்பு அதிகரிக்கும். முந்திரியை பொதுவாக மானாவாரியாக பயிர் செய்யலாம்.
உரங்கள்
ஒரு வயதான மரம் ஒன்றிற்கு தொழு உரம் 10 கிலோ, தழைச்சத்து 70 கிராம், மணிச்சத்து 40 கிராம், சாம்பல்ச்சத்து 60 கிராம் கொடுக்கக்கூடிய உரங்களை அளிக்க வேண்டும். 4 வயது வரை கொடுக்கப்பட்டுள்ள உரங்களின் அளவை ஒவ்வொரு மடங்காக அதிகரிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு பிறகு தொழு உரம் 50 கிலோ, தழைச்சத்து 500 கிராம், மணிச்சத்து 200 கிராம், சாம்பல்ச்சத்து 300 கிராம் உரங்களை அளிக்க வேண்டும். உரங்களை இரண்டாகப் பிரித்து ஜுன் – ஜுலை மாதங்களில் ஒருமுறையும், அக்டோபர் – நவம்பர் மாதங்களில் ஒருமுறையும் அளிக்க வேண்டும்.
பாதுகாப்பு முறைகள்
களை நிர்வாகம்
செடிகள் வளரும் வரை களை இல்லாமல் பராமரிக்க வேண்டும். பின் வருடம் ஒருமுறை களை எடுக்க வேண்டும்.
மரத்தில் சுமார் ஒரு மீட்டர் உயரம் வரை பக்கக் கிளைகள் வராமல் வெட்டிவிட வேண்டும். ஒவ்வொரு வருடமும் காய்ந்து போன கிளைகளை நீக்கி சூரிய வெளிச்சமும், காற்றோட்டமும் மரங்களுக்குக் கிடைக்குமாறு செய்ய வேண்டும். மேலும் ஒட்டுக்கட்டிய பகுதிக்குக் கீழ் வரும் தளிரை அவ்வப்போது கிள்ளிவிடவேண்டும். ஒட்டுச் செடியில் தோன்றும் பூக்களை நீக்கி விட வேண்டும்.
பயிர் பாதுகாப்பு
தண்டுத் துளைப்பான்
இதன் தாக்குதல் மரத்தின் அடித்தண்டில் ஆண்டு முழுவதும் காணப்படும். இதனை கட்டுப்படுத்த கார்பரில் 50 சத நனையும் தூள் 0.1 சதம் மருந்தை தண்டுப்பகுதியில் சுமார் 1 மீட்டர் உயரம் வரை தடவி விடவேண்டும்.
5% வேப்ப எண்ணெய்யை ஜனவரி – பிப்ரவரி, மே -ஜூன் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் அடி மரத்தில் பூச வேண்டும்.
தேயிலைக்கொசு
தேயிலைக் கொசுவைக் கட்டுப்படுத்த தழைப் பருவத்தில் 2 மிலி போசலான் 35 EC, மொட்டு விடும் பருவத்தில் 2 கிராம் கார்பரில் 50 WP மற்றும் கொட்டை உருவாகும் பருவத்தில் 2 மிலி மேனோகுரோட்டோபாஸ் மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.
இலைத் துளைக்கும் புழு
இதனை கட்டுப்படுத்த 5% வேப்பங்கொட்டை சாறினை துளிர்விடும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் தெளிக்க வேண்டும்.
வேர்த் துளைப்பான்
ஒரு மரத்திற்கு மோனோகுரோட்டோபாஸ் 5 மில்லி மருந்துடன் 5 மில்லி தண்ணீர் கலந்த கலவையை புழு தாக்கிய துளைகளில் ஊற்றவேண்டும். இதை குறிப்பிட்ட இடைவெளியில் இரண்டு முறை செய்ய வேண்டும்.
ஆந்தராக்னோஸ்
இதனை கட்டுப்படுத்த துளிர்விடும் பருவத்தில் 1% போர்டாக்ஸ் கலவையுடன் பெரஸ் சல்பேட்டை கலந்து தெளிக்க வேண்டும்.
நுனிக்கருகல்
நோய் தாக்கப்பட்ட கிளைகளை வெட்டி நீக்க வேண்டும். பிறகு அந்த இடத்தில் 1 சதவீதம் போர்டோக்கலவை மருந்தினை தடவி விடவேண்டும்.
அறுவடை
கன்றுகள் நட்ட மூன்றாவது வருடத்தில் காய்ப்புக்கு வந்து விடும். மார்ச் – மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரிப் பழங்களிலிருந்து கொட்டைகளைத் தனியாகப் பிரித்தெடுத்து, வெய்யிலில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் நன்கு உலர்த்தவேண்டும்.
மகசூல்
ஒரு வருடத்தில் ஒரு மரத்தில் இருந்து 3 முதல் 4 கிலோ வரை மகசூல் கிடைக்கும்.
ஊடுபயிர்
கன்றுகள் நட்ட, மூன்று ஆண்டுகளுக்கு பின்பே, முந்திரியை சாகுபடி செய்ய முடியும். எனவே இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சை பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம்.
பயன்கள்
- முந்திரியில் மாங்கனீசு, பொட்டாசியம், தாமிரம், இரும்பு, மெக்னீசியம், துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற கனிம தாதுக்கள் அதிக அளவில் உள்ளன.
- முந்திரி பருப்பில் குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.
- கையளவு முந்திரிப் பருப்புக்களை உட்கொள்வதால் பசியை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்த முடியும்.
- முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது.
- முந்திரி பருப்பில் அதிகமாக உள்ள செலினியம் ஊட்டச்சத்தானது உடலுக்கு நோய் எதிர்ப்பு திறனை தரவல்ல நொதிகளான குளுடாதயோன் பெராக்ஸிடேஸ் நொதிக்கு இணை காரணியாக செயல்படுகிறது.
மனுவேல் says
தங்களின் விவசாய குறிப்புகள் பயனுள்ளவை.
Navinkumar V says
நன்றி. தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள்
பாவாணன் says
வணக்கம்….
முந்திரி மரம் நிலவளத்தை பாதிக்குமா?
தைல மரத்தை போல் நிலத்தடி நீரை உறிஞ்சுமா?
a.asaraf ali says
மிகவும் பயனுள்ள தகவல்கள்.நன்றி …
கைலாஷ் says
மிகவும் அருமையான விபரம் தங்களுக்கு நன்றி
Manavalan says
நீங்கள் கொடுத்த தகவல் எனக்கு மிகவும் பயணுல்ளதாக இருந்து… மிக்க நன்றி
கவியோகி வேதம் says
என்னருமை நண்பரே,
ஆசிகள்.இன்னும் எனக்குத் தெளிவாக வில்லை. அந்த முந்திரிக்கொட்டையைமட்டும் தனியாக எடுத்து வெயிலில் உலர்த்திப் பின்பு உர மண்ணில் இட்டால் போதாதா> முளைக்காதா செடி?
அது என்ன ஒட்டுக்கட்டுதல் மூலமாக இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.?
விளக்கவும். கொட்டை விதையில்லையா.?
கவியோகி வேதம்
Navinkumar V says
இது நம்முடைய குழு. இங்கு உங்கள் சந்தேகங்களை கேட்கலாம்
https://www.facebook.com/groups/agriculturetripiyarkaivivasayam
ராஜா says
ஏக்கர் ஒன்றுக்கு அடர் நடவு எனில் 180 மரக்கன்றுகள் நடலாம். கொஞ்சம் இடைவெளி விடும்போது 100 முதல் 120 வரை நடலாம். இவ்வாறு முறையாகப் பராமரித்து வந்தால், மரம் ஒன்றுக்கு அதிகபட்சமாக 120 கிலோ வரை முந்திரக்கொட்டை எடுக்க முடியும். சாதாரணமாகப் பராமரிப்பு இல்லாத மரம் 20 கிலோ மட்டுமே காய்க்கும்”